ஆசிய கோப்பையில் தோல்வியை தழுவினாலும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இப்திகார் அகமது கூறியுள்ளார்.
கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசும் வசனம் மீம் கிரியேட்டர்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதாவது அரை இறுதி போட்டியில் கில்லி அணி தோல்வியை தழுவினாலும் இறுதி போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என வசனம் இடம் பெறும்.

இது ஒரு லாஜிக் ஓட்டையாக அப்போது பார்க்கப்பட்டது. தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்த நிலையில் உலககோப்பை தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று இப்திகார் அகமது பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் நம்பர் ஒன் அணியாக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் வலம் வருகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாங்கள் நம்பர் ஒன் அணி போல் தான் இந்த தொடரில் விளையாடினோம். ஒரு தோல்வி மூலம் எங்களுடைய அணி ஏமாற்றம் அடைந்து இருப்பதாக கூறுவது முறையல்ல. நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது நிச்சயமாக உலகக்கோப்பை தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான போட்டி நிச்சயம் கடினமாக தான் இருந்தது. எனினும் கடைசி கட்டத்தில் நாங்கள் ஆட்டத்திற்குள் மீண்டும் வந்தோம். அந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பினோம். ஆனால் ஷாமான் அறிமுக வீரராக கடைசி ஓவரை வீசினார். எனினும் அவர் கடைசி ஓவரின் 6 அல்லது ஏழு ரன்களை தற்காத்துக் கொள்வார் என நினைத்தோம்.
ஆனால் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்தான். கடைசி இரண்டு பந்தில் ஆறு ரன்கள் என இருந்தது. ஆனால் அந்த ஐந்தாவது பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி சென்றது. இதனால் இலங்கை அணியிடம் இருந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை என்பது தான் உண்மை என்று இப்திகார் அஹமத் கூறியுள்ளார். அதிஷ்டத்தால் தான் இலங்கை வென்றது என்பது போல் அவர் பேசியிருப்பது இலங்கை ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.