அபுதாபி: 2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், இந்திய அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டெழுந்துள்ள பாகிஸ்தான் அணி, நேற்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கான தனது நம்பிக்கையை மீட்டுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் ஹுசைன் தலாத், போட்டிக்குப் பிறகு பேசியபோது, 'இன்னும் இரண்டே போட்டிகள்தான், கோப்பை எங்களுடையது' என்று அதிக தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
இந்த தொடரில் வலுவான அணியான இந்தியாவிற்கு எதிராக இரண்டு முறை தோல்வி அடைந்து இருக்கும் பாகிஸ்தான் அணி, கோப்பையை வெல்லும் என அந்த அணி வீரர் கூறி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் அவரது பேச்சை விமர்சித்து வருகின்றனர். ஏனெனில், இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இரண்டு முறை தோற்ற பாகிஸ்தான் அணியால் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த முடியுமா? என்ற கேள்வி உள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த வாழ்வா - சாவா ஆட்டத்தில், ஹுசைன் தலாத் தனது ஆல்-ரவுண்டர் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் ஷனகா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், 134 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, பொறுப்புடன் ஆடி ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தப் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "வங்கதேசம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததிலிருந்து நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறோம், அதனால் வீரர்களுக்குப் போதுமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடைத்துள்ளது. இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாத வீரர்கள் கூட, தற்போது தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுவதால் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியுள்ளனர். இதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் நடக்கும். இனி எங்களுக்கு இரண்டே போட்டிகள்தான் உள்ளன, இரண்டிலும் சிறப்பாக ஆடினால் கோப்பையை நாங்கள் வெல்வோம்" என்று தலாத் தெரிவித்தார்.
இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசிய தலாத், "இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன்பு எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. ஆனால், நாங்கள் தோற்றுக் கொண்டிருந்தது யாருக்குமே மகிழ்ச்சியாக இல்லை என்பது உண்மை. நாங்கள் வெற்றி பெற விரும்பினோம், எங்கள் நாட்டு மக்களும் அதையே விரும்பினார்கள்."
"இந்தப் போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்கள் மீது நிறைய விமர்சனங்கள் வந்தன, நாங்கள் அவற்றைத் தவிர்க்கவே முயற்சித்தோம். ஏனென்றால், ஒரு முக்கியமான போட்டிக்கு வரும்போது, அந்த விமர்சனங்களை மனதில் சுமந்து வருவது அணிக்கு நல்லதல்ல" என்று தலாத் கூறினார். பாகிஸ்தான் அணி தனது கடைசி மற்றும் இறுதி சூப்பர் 4 போட்டியில், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) அன்று துபாயில் எதிர்கொள்கிறது.