மும்பை: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் சாம்பியன்ஸ் தொடர் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தற்போது இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 15 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் கத்தாரில் நடத்தப்படுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் யுஏஇ அணிகள் இடம்பெறுகின்றன.

குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கு பெறுகின்றன.இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதி யுஏஇ அணிக்கு எதிராக பங்கேற்கிறது. பெரும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நவம்பர் 16ஆம் தேதியும், இந்தியா ஓமன் அணி ஆட்டம் நவம்பர் 18ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து லீக் சுற்றி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் முதல் அரை இறுதி 21-ஆம் தேதியும் இரண்டாவது அரை இறுதி அதே நாளில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 23ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான வைபவ் சூர்யவன்சி, ஆயுஷ் மாத்ரே மற்றும் பிரியான்ஸ் ஆர்யா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோஷித் நக்வி தலைமையில் இயங்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் இந்த தொடரையும் நடத்துகிறது.
ஏற்கனவே ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனால் பிசிசிஐ க்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் கடும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுமா, அப்படி கோப்பையை வென்றால் யார் சாம்பியன் பட்டத்தை வழங்குவார்கள் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.