தோஹா:ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ஏ அணியும், வங்கதேச ஏ அணியும் பலபபரீட்சை நடத்தியது. தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச ஏ அணியில் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜிசான் ஆலம் 26 ரன்களில் ஆட்டம் இழக்க, ஹபிபுர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து மெகா சிக்ஸர்கள் அடங்கும்.

ஜாவாத் அப்ரார் 13 ரன்களிலும் கேப்டன் அக்பர் அலி ஒன்பது ரன்களிலும் வெளியேறினர். இந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் கீழ் வரிசையில் விளையாடிய மெஹரூப் என்ற வீரர் 18 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதனால் வங்கதேச ஏ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணி வீரர்கள் களமிறங்கினர். வழக்கம் போல் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி தன்னுடைய அதிரடியை காட்டினார். 15 பந்துகளில் அவர் 38 ரன்கள் குவித்தார்.இதில் நான்கு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி அடங்கும். மறுமுனையில் பிரியான்ஸ் ஆர்யா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமன் தீர் வெளியேற கேப்டன் ஜித்தேஷ் சர்மா 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இதேபோன்று நெஹல் வதேரா 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். ரமந்தீப் சிங் 17 ரன்களும், அஸ்டோஷ் 13 ரன்கள் எடுக்க இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷ் துபே பந்தை பௌண்டரிக்கு அடிக்க முற்பட்டார். இதனை தடுத்த வங்கதேச வீரர்கள் ரன் அவுட் செய்ய முயற்சி செய்தனர்.
இதில் மிகப்பெரிய காமெடி ஒன்று நடந்தது. பந்தை மாற்றி மாற்றி ஸ்டெம்பில் அடிக்க வங்கதேச வீரர்கள் முயற்சி செய்து கடைசியில் யாருமே பந்தை ஸ்டெம்பில் அடிக்கவில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி வீரர்கள் மூன்று ரன்கள் ஓடி ஆட்டத்தை சமன் செய்து விட்டார்கள். இதை அடுத்து போட்டியை தீர்மானிக்கக்கூடிய சூப்பர் ஓவர் நடைபெற்றது.
இதில் ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளில் இந்திய அணியின் இரண்டு விக்கெட்களும் பறிபோனது. இதனால் வங்கதேச அணி முதல் பந்திலேயே வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வைபவ் சூரியவன்ஷியை தொடக்க வீரராக சூப்பர் ஓவரில் அனுப்பாதது தவறாக போய் முடிந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.