அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் t20 தொடரில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டவுடன் தொடக்க வீரராக இந்திய அணியில் களமிறங்கி வந்த சஞ்சு சாம்சன் நடுவரிசைக்கு அனுப்பப்பட்டார். அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு ஆண்டாக சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் விளையாடாத தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கினோம் என்று வாய்க்கூசாமல் அஜித் அகார்கர் கூறினார்.
சாம்சன் டி20 கிரிக்கெட்டில் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார். அண்மையில் சதம் சதமாக அவர் அடித்து வந்தார். இந்த தருணத்தில் சாம்சன் நடு வரிசையில் களமிறங்கியதால் கடந்த இரண்டு போட்டிகளாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த தருணத்தில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் சாம்சன் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 45 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். ஆடுகளமும் ஓமனின் பந்து வீச்சும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இதனால் மற்ற வீரர்கள் தடுமாறிய நிலையில், சாம்சன் மட்டும் அபாரமாக விளையாடினார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற சாம்சன் பேசும்போது நாங்கள் விளையாடும்போது கடும் சூடாக இருந்தது. தாங்க முடியாத அளவுக்கு வியர்வை கொட்டியது. கடந்த சில வாரங்களாக என்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.
அதற்கு எங்களுடைய ட்ரெயினர் ஆட்ரியன் உதவிகரமாக இருந்தார். நான் இந்திய அணிக்காக பேட்டிங் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் செலவிட்டு ரன்களை சேர்த்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. சும்மா சொல்லக்கூடாது ஓமன் இன்று சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் நாம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
பவர் பிளேவில் நல்ல முறையில் பந்து வீசினார்கள். பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனால் ஓமன் பந்துவீச்சை அடிப்பதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கவனித்தேன். நாட்டுக்காக எந்த முறையில் பங்களித்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான். நான் எப்போதுமே நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வேன். மற்றதை கற்றுக் கொள்ள முயற்சி செய்வேன் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.