
அறிமுகம்....
மிர்புரில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக 3-வது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அன்வர் அலிக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது தல்ஹா, ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.

வெறிச்சோடிய கேலரிகள்...
இந்த பரபரப்பான ஆட்டத்தை ரசிக்க 25 ஆயிரத்து 200 இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில், டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டதாக கூறப்பட்ட போதிலும், பல கேலரிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.

முதல் அவுட்....
முதலில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் பேட்டிங்கை தொடங்கினர். கடந்த முறை அசத்திய தவான் 10 ரன்னில் (13 பந்து), முகமது ஹபீசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

கோஹ்லியும் அவுட்....
2-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த நம்பிக்கை நாயகன் கேப்டன் விராட் கோஹ்லி (5 ரன், 11 பந்து), உமர்குல் ஆப்-சைடுக்கு வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடிக்க முயற்சித்து, விக்கெட் கீப்பர் உமர் அக்மலிடம் கேட்ச் ஆனார். அவருக்குப் பிறகு ரஹானே ஆட வந்தார்.

மந்தமான ஸ்கோர்...
அணியின் ஸ்கோர் 92 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் ஷர்மா 56 ரன்களில் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ரோகித் வெளியேறியதும் இந்திய அணியின் ஸ்கோர் மந்தமானது. அடுத்த 20 ஓவர்களில் வெறும் 3 பவுண்டரி மட்டுமே ஓடின.

சுழற்பந்து வீச்சாளர்கள்...
புதுமுக வேகப்பந்து வீச்சாளர் முகமது தல்ஹாவும், சுழற்பந்து வீச்சாளர்கள் அஜ்மல், அப்ரிடி, ஹபீஸ் ஆகியோரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். ரஹானே (23 ரன், 50 பந்து), விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (23 ரன், 46 பந்து) அதிரடியாக பேட்டை சுழற்ற முடியாமல் நடையை கட்டினர்.

ஜடேஜா அரைசதம்...
155 ரன்னுக்குள் 5 விக்கெட் (36.1 ஓவர்) சரிந்ததால் இந்திய அணியின் நிலைமை மேலும் சிக்கலானது. இந்த சூழலில் அம்பத்தி ராயுடுவுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இவர்கள் தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினர். 45-வது ஓவரில் இந்தியா 200 ரன்களை தொட்டது.

100வது ஒருநாள் போட்டி....
2-வது அரைசதத்தை அடித்த ராயுடு 58 ரன்களில் (62 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். இதன் பின்னர் பின்வரிசை வீரர்களின் துணையுடன் ஜடேஜா ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். முன்னதாக 12 ரன்னில் இருந்த போது எளிதான கேட்சில் (விட்டவர் முகமது ஹபீஸ்) இருந்து தப்பித்த ஜடேஜா இறுதி கட்டத்தில், அஜ்மல், உமர்குல் ஓவர்களில் சிக்சர் அடித்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது 9-வது அரைசதத்தை பூர்த்தி செய்த அவருக்கு இது 100-வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

246 ரன்கள் இலக்கு...
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இநதிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 52 ரன்களுடனும் (49 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றார். கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 44 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் ஆட்டம்....
அடுத்து 246 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷர்ஜீல் கானும் (25 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அகமது ஷேசாத்தும் (42 ரன், 44 பந்து, 6 பவுண்டரி) முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (11 ஓவர்) திரட்டி வலுவான தொடக்கம் அமைத்தனர். கேப்டன் மிஸ்பா உல்-ஹக் (0) துரதிர்ஷ்டவசமாக தொடர்ந்து 2-வது முறையாக ரன்-அவுட் ஆனார். உமர் அக்மலும் (4 ரன்) நீடிக்கவில்லை.

ஸ்டம்பிங்....
113 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தானை, 5-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமது ஹபீசும், சோகயப் மக்சூத்தும் சரிவில் இருந்து மீட்டனர். பதற்றமோ, அவசரமோ இன்றி நிதானம் காட்டிய இவர்கள் ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். இருப்பினும் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாறினார்கள். மக்சூத்துக்கு 21 ரன்னில், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நல்ல ஸ்டம்பிங் செய்ய தவறினார். இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.

விறிவிறுப்பான ஆட்டம்....
ஒரு வழியாக ஸ்கோர் 200 ரன்களை (43.3 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடி பிரிக்கப்பட்டது. முகமது ஹபீஸ் 75 ரன்களில் ( 117 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வினின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் மக்சூத்தும் (38 ரன், 53 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்ப, ஆட்டத்தில் பரபரப்பு உருவானது. வெற்றிக்கனி யாருக்கு கிடைக்கும்? என்பதை கணிக்க முடியாத அளவுக்கு நகர்ந்ததால், ஆட்டத்தின் விறுவிறுப்புக் கூடியது..

அப்ரிடி...
கடைசி இரு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் 2 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் அந்த ஓவரில் வெறும் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் வெற்றி....
பாகிஸ்தான் அணியின் அப்ரிடி 50 ஓவரில் அதகளப்படுத்தினார். அடுத்தடுத்து சிக்சர் அடித்து 49.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்ரிடி 34 ரன்களுடன் (18 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

ஆட்டநாயகன்...
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 2-வது முறையாகும். இந்த தொடரில் 2-வது வெற்றியை சுவைத்த பாகிஸ்தான் இறுதிசுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த முகமது ஹபீஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

மங்கிய வாய்ப்பு....
ஏற்கனவே இலங்கையிடமும் தோற்ற இந்திய அணிக்கு 3-வது லீக்கில் இது 2-வது தோல்வியாகும்.. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் இறுதிசுற்று வாய்ப்பு மங்கி போய் விட்டது. ஒரு வேளை சில சாதகமான முடிவுகள் அமைந்தால் மாற்றம் வரலாம்.

இறுதி போட்டி....
இந்திய அணி தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானுடன் 5-ந்தேதி மோதுகிறது. இதில் இந்திய அணி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் 2 வெற்றியுடன் மொத்தம் 9 புள்ளிகளை பெற முடியும். அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்திடமும், இலங்கை அணி தனது எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்து, ரன்ரேட்டிலும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே இந்தியா இறுதி சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











