துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில், வங்கதேச அணியின் பந்துவீச்சைத் தனி ஒருவனாகப் போராடி சிதறடித்தார் தசுன் ஷனகா. அவரது அதிரடி அரைசதத்தால், இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த சூப்பர் 4 போட்டியில், 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 100 ரன்களைக் கடப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை, தனது காட்டடி ஆட்டத்தால் தசுன் ஷனகா கரை சேர்த்தது, போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், துபாய் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் அழுத்தம் கொடுத்தது. நிசங்கா 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில், தஸ்கின் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக விளையாடி வந்த குசல் மெண்டிஸ் (34 ரன்கள்) மெஹதி ஹசன் பந்துவீச்சில் வெளியேற, இலங்கை அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது.
மிடில் ஓவர்களில் வங்கதேச பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் மற்றும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். கமில் மிஷாரா (5), குசல் பெரேரா (16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14வது ஓவரில் இலங்கை அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா களத்திற்கு வந்தார். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய அவர், பின்னர் தனது உண்மையான ஆட்டத்தைக் காட்டத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர் மழை பொழிந்த அவர், வங்கதேச அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்கு மறுமுனையில் கேப்டன் சரித் அசலங்கா (12 பந்துகளில் 21 ரன்கள்) தனது பங்கிற்கு அதிரடி காட்டினார்.
கடைசி கட்டத்தில், ஷனகா அடித்த ஒவ்வொரு அடியும் இலங்கை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. வெறும் 37 பந்துகளைச் சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி சார்பில், அபாரமாகப் பந்துவீசிய முஸ்தாஃபிசுர் ரஹ்மான், 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.