மிர்பூர்: ஆசியகோப்பை இருபது ஓவர் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை இருபது ஓவர் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை - ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கையை பேட் செய்ய அழைத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சண்டிமால்( 50), தில்ஷன் (27) சிறப்பான தொடக்கத்தை கொடுத்த போது மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் மட்டுமே இலங்கை அணியால் எடுக்க முடிந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கேப்டன் அம்ஜத் ஜாவித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் முகம்மது ஷாஷத், முகம்மது நவீத் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
130 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஐக்கிய அரபு அமீரகம், முதல் ஓவர் முதல் பந்தில் சோதனையை சந்தித்தது. இலங்கை அணியின் மலிங்கா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் முகம்மது ஷாஷத் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஐக்கிய அரபு அமீரக வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அந்த அணியின் எஸ்.பி.பாடீல் மட்டுமே 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவரில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்களில் தோல்வியடைந்தது.
இலங்கை கேப்டன் மலிங்கா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குலசேகரா 3 விக்கெட்டும் ஹெராத் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.