துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, அணியின் ஆடும் லெவனில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்த முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், "சஞ்சு சாம்சன் போன்ற ஒரு திறமையான வீரரை அணியின் முக்கிய வீரராகத் தேர்வு செய்தால், அவரை ரிசர்வ் வரிசையில் அமர வைக்க முடியாது" என்று உறுதியாக கூறியுள்ளார்.

மேலும், சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருப்பது அணியின் தேர்வு குழுவிற்கு இது ஒரு நல்ல தலைவலி என்றும், இரண்டு திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஞ்சு சாம்சனின் திறமையைப் பாராட்டிய கவாஸ்கர், "சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடியவர், தேவைப்பட்டால் ஆறாவது இடத்தில் ஒரு ஃபினிஷராகவும் களமிறங்கக்கூடியவர். ஜிதேஷ் சர்மாவும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார். இருப்பினும், தொடக்க ஆட்டங்களில் சஞ்சு சாம்சனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது தனது கருத்து என்றும் அவர் கூறினார்.
கவாஸ்கர் மேலும் கூறுகையில், "எனது கணிப்புப்படி, முதல் இரண்டு போட்டிகளிலாவது ஜிதேஷ் சர்மாவை விட சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு வழங்கப்படும். அதன்பிறகு, தொடரில் அவரது ஆட்டத்தைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படலாம். இதுவே நடக்கும் என்று நான் கருதுகிறேன்" என்றார்.
துணை கேப்டனாக சுப்மன் கில் அணிக்குத் திரும்பியிருப்பதால், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த சஞ்சு சாம்சனின் இடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப்மன் கில், அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன், சமீபகாலமாக இந்திய டி20 அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதவியேற்ற பிறகு, அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 14 டி20 போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ள அவர், மூன்று சதங்களையும் விளாசியுள்ளார். இது அணியில் அவரது இடத்தை வலுவானதாக மாற்றி இருக்கிறது.
மறுபுறம், ஜிதேஷ் சர்மா ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஒரு சிறந்த ஃபினிஷராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதிரடியாக விளையாடி ரன்களைக் குவிக்கும் அவரது திறன், இந்திய அணிக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரில் யாருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அளிக்கப்படும்? என்று பார்க்கலாம்.