துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான சூப்பர் ஃபோர் சுற்று, இன்று தொடங்கியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸை வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் வென்றார். அவர் சற்றும் யோசிக்காமல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, சவாலான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. துபாய் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக டாஸ் வென்ற பிறகு பேசிய வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் குறிப்பிட்டார்.

"நாங்கள் முதலில் பந்துவீசுவோம். இந்தத் தொடரின் முதல் கட்டப் போட்டிகளைப் பார்த்தபோது, இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஆடுகளத்தின் தன்மை குறித்தும் முழுமையாகத் தெரியவில்லை. இந்தப் போட்டியில் விளையாட நாங்கள் ஆவலாக உள்ளோம்," என்று அவர் கூறினார். வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; சோஹன் மற்றும் ரிஷாத் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
டாஸ் இழந்த இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பேசுகையில், "நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சைத்தான் தேர்வு செய்திருப்போம். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம். 2021க்குப் பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர், அவர்கள் தற்போது முதிர்ச்சியடைந்து வருகிறார்கள்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் களமிறங்குவதாகவும் அவர் கூறினார்.
பிட்ச் ரிப்போர்ட்டைப் பொறுத்தவரை, துபாய் மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆடுகளம் சற்று வறண்டு காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில், இரண்டாவதாக பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்பதாலேயே கேப்டன்கள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள். மைதானத்தின் பவுண்டரி தூரங்களில் உள்ள 12 மீட்டர் வித்தியாசம், போட்டியில் பேட்டிங், ஃபீல்டிங் வியூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளிலும் உள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் ஏற்கனவே வங்கதேசத்தை வீழ்த்திய தெம்புடன் இலங்கை அணியும், அதற்குப் பழிதீர்க்கும் முனைப்புடன் வங்கதேச அணியும் களமிறங்குவதால், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை (ஆடும் லெவன்): பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷாரா, குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), தசுன் ஷனகா, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீரா, நுவன் துஷாரா.
வங்கதேசம் (ஆடும் லெவன்): சைஃப் ஹசன், தன்சித் ஹசன் தமிம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, மெஹதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.