துபாய்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி இடையே பூதாகரமாகியுள்ள ஆசிய கோப்பை சர்ச்சை, துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தில் உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மறைமுகமாக அவருக்கு இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுள்ளது.
ஐசிசி கூட்டத்தில் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு கொடுக்காத விவகாரம் இன்னும் விவாதத்திற்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி தனது முடிவை மாற்றிக்கொண்டு, கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது. இது ஐசிசி-யின் நேரடி அழுத்தத்தை தவிர்க்க நக்விக்கு வழங்கப்பட்டுள்ள மறைமுக வாய்ப்பாகவே கூறப்படுகிறது.
ஐசிசி கூட்டத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், பிசிசிஐ தரப்பிலோ அல்லது பிசிபி தரப்பிலோ இந்த சர்ச்சை குறித்து இதுவரை பேசப்படவில்லை. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பிசிசிஐ இந்த விவகாரத்தை எழுப்பக்கூடும் என்பதால், அதற்குள் இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர நக்விக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதும் அவர் ஆசிய கோப்பையை கொடுக்கவில்லை என்றால் மோஷின் நக்வி இனி கிரிக்கெட் சார்ந்த எந்த அமைப்பின் நிர்வாக பொறுப்பிலும் இருக்கக் கூடாது என ஐசிசி அவருக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிகளை இழக்க நேரிடும்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறுத்துவிட்டார். நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பதே இதற்குக் காரணம்.
இதனால் கோபமடைந்த நக்வி, வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பையை வழங்காமல், அதைத் தன்னுடன் மைதானத்தை விட்டு எடுத்துச் சென்றார். அதன்பிறகு, பிசிசிஐ பலமுறை முறைப்படி கோரிக்கை விடுத்தும், "துபாயில் உள்ள ஏசிசி தலைமையகத்திற்கு இந்திய வீரர் ஒருவர் நேரில் வந்து தன்னிடம் இருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என நக்வி தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.
நக்வியின் இந்தத் தொடர் மறுப்பை அடுத்து, பிசிசிஐ கடும் கண்டனம் தெரிவித்தது. ஏசிசி தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கக் கோருவதுடன், இந்த விவகாரத்தை ஐசிசி கூட்டத்தில் எழுப்புவோம் என்றும் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. தற்போது ஐசிசி தலைவராக பிசிசிஐயின் முன்னாள் செயலாளர் ஜெய் ஷா பதவி வகிக்கும் நிலையிலும், நக்வி தனது நிலையில் இருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
ஆசிய கோப்பை சர்ச்சை இன்னும் விவாதத்திற்கு வராத நிலையில், ஐசிசி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கலாம்.
19 வயதுக்குட்பட்டோருக்கான அண்டர் 19 உலகக்கோப்பையை டி20 போன்ற சிறிய வடிவத்திற்கு மாற்ற வேண்டும் எனச் சில உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதன்கிழமை நடந்த தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில், போட்டி வழக்கம் போல் 50 ஓவர் வடிவத்திலேயே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த அண்டர்-19 உலகக்கோப்பை 2026-ல் நமீபியா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெறும்.
தரவுகளைப் பணமாக்குவதன் (Data Monetization) மூலம் புதிய வருவாய் ஈட்டும் வழிகளை ஐசிசி ஆராய்ந்து வருகிறது. இதுகுறித்த எதிர்காலத் திட்டங்களை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி சஞ்சோக் குப்தா விளக்கினார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 'ஸ்டாப்-கிளாக்' விதிமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் முக்கியமானவை. மோஷின் நக்வி தனது பிடிவாதத்தைக் கைவிட்டு கோப்பையை ஒப்படைப்பாரா, அல்லது பிசிசிஐ இந்த விவகாரத்தை ஐசிசி நிர்வாகக் குழுவில் முறையாகப் பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லுமா என்பதை கிரிக்கெட் உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.