கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி, இந்திய கிரிக்கெட் வீரர்களை 'தீவிரவாதிகள்' என்று இழிவாகப் பேசியுள்ளார். ஆசியக் கோப்பையை இந்திய அணிக்கு வழங்க மறுத்து, கோப்பையைத் தன்னுடன் எடுத்துச் சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியைப் பாராட்டும் விதமாக அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆசியக் கோப்பை தொடரில், இறுதிப் போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், பாகிஸ்தானின் தோல்வியை விட, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியின் சர்ச்சைக்குரிய செயலே அதிகமாகப் பேசப்பட்டது. பரிசளிப்பு விழாவில் இந்திய அணிக்குக் கோப்பையை வழங்க மறுத்து, அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார் நக்வி. இந்த வெட்கக்கேடான செயலை, பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் தேசப் பெருமையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் உச்சகட்டமாக, பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி, மோஷின் நக்வியைப் பாராட்டிப் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய வீரர்களைத் 'தீவிரவாதிகள்' என்று அவர் குறிப்பிடும்போது, அருகில் இருந்த மோஷின் நக்வி எந்த மறுப்பும் தெரிவிக்காமல், புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோஷின் நக்வியைப் புகழ்ந்து பேசிய டெஸ்ஸோரி, "அவர் (நக்வி) மைதானத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இந்திய அணி கோப்பையைப் பெற வரவில்லை. ஆனாலும் அவர் பொறுமையுடன் காத்திருந்தார். அவரை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு, வேறு யாரையாவது கோப்பையைக் கொடுக்கச் சொல்லலாம் என அவர்கள் (இந்திய அணி) விரும்பினர். ஆனால், நமது சேர்மன், நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட என்பது அவர்களுக்குத் தெரியாது" என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதுதான் தீவிர சர்ச்சையைக் கிளப்பியுள்ளது: "பின்னர் அவர் இந்திய அணியை தீவிரவாதிகளைக் கையாள்வது போல கையாண்டார். அவர் (நக்வி) கோப்பையை காரில் வைத்து எடுத்துச் சென்றுவிட்டார். இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் கோப்பைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று அவர் ஏளனமாகப் பேசினார். இந்த இழிவான கருத்துகளை டெஸ்ஸோரி பேசிக்கொண்டிருந்தபோது, மோஷின் நக்வி புன்னகையுடன் அதை ரசித்துக் கொண்டிருந்த காட்சி, விளையாட்டு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோஷின் நக்வி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மட்டுமல்லாது, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். எனவே, அவரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என இந்திய அணி நிர்வாகம் தொடக்கத்திலிருந்தே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
இறுதிப் போட்டிக்குப் பிறகு, மேடையில் நக்வி காத்திருந்தபோதும், இந்திய வீரர்கள் அவரிடமிருந்து பதக்கங்களையோ, கோப்பையையோ பெறச் செல்லவில்லை. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த நக்வி, இறுதியில் கோப்பையைத் தன்னுடன் எடுத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள், கோப்பை இல்லாத காலி மேடையில், காற்றிலேயே ஒரு கோப்பையைத் தூக்குவது போல பாவனை செய்து தங்களது வெற்றியைக் கொண்டாடினர். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி, நக்வியின் செயலுக்கு எதிரான கண்டனங்கள் வலுத்தன.
விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களைத் 'தீவிரவாதிகள்' என அழைப்பது, விளையாட்டுத் தீண்டாமையின் உச்சகட்டம் என்றும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.