மும்பை: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து பல நாட்கள் ஆகியும், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இதுவரை கோப்பை வழங்கப்படாத விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெறுவதில் தொடரும் இழுபறி காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்னும் ஒருநாள் காத்திருப்போம், அதற்குள் கோப்பையை ஒப்படைக்கப்படாவிட்டால், இந்த விவகாரத்தை ஜெய் ஷா தலைவராக இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) கொண்டு செல்வோம் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது. நக்வி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிப்பதே இதற்குக் காரணம். இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெறுவதை இந்திய வீரர்கள் தவிர்த்தனர்.
இந்திய அணியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரி ஒருவர், மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிய கோப்பையை எந்த விளக்கமும் அளிக்காமல் எடுத்துச் சென்றார். இந்தச் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, "பத்து நாட்களுக்கு முன்பு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். அதில், கோப்பையை உடனடியாக பிசிசிஐயிடம் ஒப்படைக்குமாறு கோரியிருந்தோம். ஆனால், இன்றுவரை எங்களுக்குக் கோப்பை வந்து சேரவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "இன்னும் ஒரு நாள் நாங்கள் காத்திருப்போம். நவம்பர் 3-ஆம் தேதிக்குள் கோப்பை கிடைக்காவிட்டால், துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்தில் நவம்பர் 4-ஆம் தேதி (இன்று) நடைபெறும் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம். சர்வதேச கிரிக்கெட்டின் உச்ச அமைப்பிடம் எங்கள் குறைகளைத் தெரிவிப்போம். ஐசிசி நிச்சயம் நியாயம் வழங்கும் என்றும், கோப்பையை விரைவில் பெற இந்தியாவுக்கு உதவும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்" என்று திட்டவட்டமாகக் கூறினார். தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருக்கிறார். எனவே, இந்த விவகாரம் மோஷின் நக்விக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பை கிடைக்காத போதிலும், இந்திய வீரர்கள் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கைவிடவில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து வந்ததைப் போலவே மெதுவாக நடந்து வந்து, கோப்பை இல்லாதபோதிலும், அது இருப்பதாகப் பாவனை செய்து 'கற்பனை கோப்பை'யைத் தூக்கி சக வீரர்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோப்பை சர்ச்சை, இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் உறவில் மேலும் ஒரு கசப்பான அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது. பிசிசிஐயின் இந்த இறுதி எச்சரிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோப்பையை ஒப்படைக்குமா அல்லது இந்த விவகாரம் ஐசிசியின் பார்வைக்குச் செல்லுமா என்பது விரைவில் தெரியவரும்.