மிர்புர்: ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா தனது கடைசி லீக் லீக்கில் 3 தோல்வி கண்டுள்ள கத்துக்குட்டி அணியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ரோஹன் முஸ்தபாவும், ஸ்வப்னில் பாட்டீலும் எமிரேட்ஸ் அணிக்கு தொடக்கம் தந்தனர். ஸ்வப்னில் பாட்டீல் 1 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய எமிரேட்ஸ் வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியின் சைமான் அன்வர் மட்டும் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் எமிரேட்ஸ் 9 விக்கெட்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. சைமான் அன்வர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் சார்பில் புவனேஷ் குமார் 2 விக்கெட்களையும், பவன் நெகி, ஹர்பஜன் சிங், பும்ரா, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
ரோகித் சர்மா, தவான் ஜோடி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் தந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளுக்கு 36 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் யுவராஜ் சிங். இருவரும் அணியை வெற்றி பாதைக்கு எளிதாக அழைத்து சென்றனர். யுவராஜ் அதிரடியாக 14 பந்துகளுக்கு 25 ரன்களும், தவான் நிதானமாக ஆடி 20 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 10.1 ஓவரில் 82 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையில் 4வது வெற்றியை பெற்றது. இதையடுத்து வரும் 6 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.