துபாய்: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியது. இலங்கை வீரர் பதும் நிசங்கா அடித்த பந்து, கேட்ச் டிராப் ஆகி சிக்ஸருக்குச் சென்றது. ஆனால், ஸ்கோர்போர்டில் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை. இது களத்தில் இருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம், இலங்கை இன்னிங்ஸின் 10வது ஓவரில் நடந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அந்த ஓவரின் மூன்றாவது பந்தை வீச ஓடி வந்தார். அவர் நடுவரைக் கடந்து சென்றபோது, நடுவர் திடீரென அந்தப் பந்தை 'டெட் பால்' (Dead Ball) என்று சைகை செய்தார்.

ஆனால், இதைக் கவனிக்காத வருண் சக்கரவர்த்தி பந்தை வீச, பேட்ஸ்மேன் பதும் நிசங்கா அதை உயரத் தூக்கி அடித்தார். பவுண்டரி லைனுக்கு அருகே நின்றிருந்த அக்சர் படேல், அந்த கேட்ச்சை நழுவவிட்டார், பந்து சிக்ஸருக்குச் சென்றது. இலங்கை வீரர்கள் சிக்ஸர் என்று நினைத்த நிலையில், நடுவர் அதை ரன்னாக அறிவிக்கவில்லை.
காரணம், பந்து வீசப்படுவதற்கு முன்பாகவே நடுவர் அதை 'டெட் பால்' என அறிவித்துவிட்டார். எனவே, அந்தப் பந்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை, அதற்கான ரன்களும் வழங்கப்படவில்லை. வருண் சக்கரவர்த்தி அந்தப் பந்தை மீண்டும் வீச வேண்டியிருந்தது. மறுபுறம் கேட்ச்சை நழுவ விட்ட அக்சர் பட்டேல் விமர்சனத்தில் இருந்து தப்பினார்.
இந்தச் சம்பவத்தால் நிசங்கா தனது கவனத்தை இழக்கவில்லை. அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் விளாசி, தனக்கு மறுக்கப்பட்ட சிக்ஸருக்குப் பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர், வெறும் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை எட்டினார். சிக்ஸர் அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மொத்தம் 58 பந்துகளைச் சந்தித்த அவர், 7 ஃபோர்கள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்து, கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நிசங்காவின் அபாரமான சதத்தால், இலங்கை அணி 20 ஓவர்களில் இந்தியாவின் 202 ரன்கள் என்ற ஸ்கோரைச் சமன் செய்தது. இதனால், போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் (31 பந்துகளில் 61 ரன்கள்) அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. திலக் வர்மா (49*) மற்றும் சஞ்சு சாம்சன் (39) ஆகியோரும் முக்கிய பங்களிப்பை அளித்தனர்.