மும்பை: 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு, அதில் ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், இந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று மிகப்பெரிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, துபாயில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் உள்ள சவால்களைச் சமாளித்து, கோப்பையை வெல்வதற்கான அனைத்து திறமைகளும், சமபலமும், மனநிலையும் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். துபாய் ஆடுகளம் பேட்டிங் செய்ய சவாலான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் சேவாக் அது குறித்தும் பேசி இருக்கிறார்.

சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய சேவாக், "ஆசிய கோப்பை எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் எந்தவொரு சவாலையும் சமாளிக்கும் திறன், சமநிலை மற்றும் மனநிலை உள்ளது."
"துபாயில் விளையாடுவது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும், ஆனால் அதுபோன்ற சூழ்நிலையில்தான் நமது வீரர்கள் ஜொலிப்பார்கள். இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்," என்று உறுதியாக தெரிவித்தார் சேவாக்.
இந்திய அணியின் கலவை மற்றும் கேப்டன்சி குறித்தும் அவர் பாராட்டி பேசினார். "இந்த இந்திய அணியில் இளமையும், அனுபவமும் சரியான கலவையில் உள்ளது. சூர்யாவின் அச்சமற்ற தலைமையின் கீழ், அவர்களால் மீண்டும் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரது அதிரடியான மனநிலை டி20 வடிவத்திற்கு மிகவும் பொருத்தமானது. இதே நோக்கத்துடன் இந்திய அணி விளையாடினால், இந்தியா கோப்பையை வெல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்று சேவாக் மேலும் கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், தற்போதுள்ள அணியின் மீது சேவாக் முழு நம்பிக்கை வைத்துள்ளது, அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
காத்திருப்பு வீரர்கள்: பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரல்.