துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து பல வாரங்கள் ஆகியும், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்குக் கோப்பையை வழங்குவதில் நீடித்து வந்த சர்ச்சை தற்போது பூதாகரமாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவருமான மோஷின் நக்வியின் பிடிவாதத்தால், கோப்பை இன்னும் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை. இந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) ஆதரவாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் களமிறங்கியுள்ளது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவின்போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நக்வியின் இந்திய எதிர்ப்பு கருத்துக்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்திய அணியின் புறக்கணிப்பால் அதிருப்தியடைந்த மோஷின் நக்வி, கோப்பையை இந்திய அணியிடம் வழங்காமல், தன்னுடன் எடுத்துச் சென்றார். இந்த நிகழ்வு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெற்றி பெற்ற அணிக்குச் சேர வேண்டிய கோப்பை, இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டது குறித்து பிசிசிஐ தீவிர கண்டனம் தெரிவித்தது. கோப்பையை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்குக் கோரிக்கை விடுத்தது. ஆனால், மோஷின் நக்வி, "பிசிசிஐ பிரதிநிதி ஒருவர் துபாயில் உள்ள ACC தலைமையகத்திற்கு நேரில் வந்து கோப்பையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார்.
நக்வியின் இந்த ஆணவமான நிலைப்பாட்டை பிசிசிஐ திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு உரிய மரியாதையுடன் கோப்பையை அதன் சொந்த மண்ணில் ஒப்படைப்பதே மரபு என்றும், துபாய்க்கு வந்து கோப்பையைப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிசிசிஐ தெளிவாகத் தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், பிசிசிஐயின் நிலைப்பாட்டிற்கு இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும், மோஷின் நக்விக்கு எழுதியுள்ள கடிதத்தில், "வெற்றி பெற்ற இந்திய அணியிடம் உடனடியாகக் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளன. இது நக்விக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மோஷின் நக்வியின் பிடிவாதத்தால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், இந்த பிரச்சினையை அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கூட்டத்தில் எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐசிசியின் தலைவராக முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பது, இந்தியாவிற்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஐசிசி கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும்போது, மோஷின் நக்விக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.