ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அணி அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. 1951 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் இந்திய அணி அதிகபட்சமாக 2018 ஆம் ஆண்டு ஜக்கார்ட்டாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 70 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த நிலையில் சீனாவில் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக்கில் இந்த ரெக்கார்டை இந்தியா முறியடித்திருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 81 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது. அதேபோல் இந்திய அணி இதுவரை இல்லாத அளவில் ஒரே சீசனில் 18 தங்கம் வென்று அசத்தியிருக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் இந்திய அணி 12 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11 வது நாளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோன்று கிஷோர் குமார் வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார்.
இதேபோன்று ஆடவருக்கான 4*400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது இதேபோன்று மகளிருக்கான 4* 400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றது. இதே போன்று ஆடவருக்கான ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அவினாஷ் சாபேல் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோன்று மகளிருக்கான 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹார்மிலான் வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரிவில் ஹார்மிலான் தாய் மாதுரி சிங், வெள்ளிப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று 35 கிலோமீட்டர் பந்தயத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது. இதேபோன்று வில்வித்தை காம்பவுண்ட் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுரேகா ஜோதி மற்றும் ஓஜா தங்கப் பதக்கத்தை தட்டி சென்றது.
இதேபோன்று ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். குத்துச்சண்டைக்கான மகளிர் 75 கிலோ எடைப்பருவில் இந்தியாவின் லவ்லீனா தோல்வியை தழுவியதன் மூலம் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதேபோன்று மற்றொரு வீராங்கனையான பர்வீன் ஹூடா வெண்கல பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் சுனில் குமார் வெண்கல பதக்கமும் வென்றனர். ஹாக்கியில் இந்திய அணி தென்கொரியாவை 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இதைப் போன்று கபடி போட்டியில் இந்திய ஆடவர் அணியும் மகளிர் அணியும் அரை இறுதிக்கு சென்று இருக்கிறார்கள். பதக்கப் பட்டியலில் இந்தியா 81 பதக்கங்களுடன் தொடர்ந்து நான்காம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் 316 பதக்கங்களுடன் சீனாவும், ஜப்பான் 147 பதக்கத்துடனும் இரண்டாவது இடத்திலும், தென்கொரியா 148 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.