ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா - மலேசியா அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது. மழையால் போட்டி பல முறை தடைபட்டது.
இந்திய அணி தன் இன்னிங்க்ஸ் ஆடி முடித்த நிலையில், மலேசியா பேட்டிங் செய்ய வந்த போது மழை மீண்டும் வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி, மலேசியாவை விட முன்னே இருப்பதால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தப் போட்டியில் மலேசியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஜோடி ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா அதிரடி ஆட்டம் ஆடினர். மந்தனா 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின் மழை வந்ததால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஜெமிமா ரோட்ரிகஸ் - ஷபாலி ஜோடி அதிரடியாக ரன் சேர்க்கத் துவங்க மலேசியா அணி விழி பிதுங்கியது. ஃபீல்டிங்கில் படு மோசமாக சொதப்பியது அந்த அணி. அது மட்டுமின்றி இந்திய வீராங்கனைகள் எந்த பக்கம் ரன் குவிக்கிறார்கள் என்பதை சரியாக கணித்து ஃபீல்டிங் நிற்க வைக்காமல் லெக் திசையில் போட்டி முழுவதும் மூன்று ஃபீல்டர்களை நிற்க வைத்தார் மலேசியா கேப்டன்.
மலேசியாவின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட ஷபாலி வர்மா 39 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 5 சிக்ஸ் அடித்தார் அவர். ஷபாலி ஆட்டமிழந்த பின் வந்த ரிச்சா கோஷ் 7 பந்துகளில் 21 ரன்கள் குவித்து மிரட்டினார். ரோட்ரிகஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி 15 ஓவர்களில் 173 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து மலேசியா அணி ஆடத் துவங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில், மீண்டும் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.