ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்தோனேசிய அணியிடம் 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இருக்கிறது மங்கோலிய மகளிர் அணி.
பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் திணறிய அவர்களின் ஆட்டம் பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன.

அதிகாரப்பூர்வமான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் துவங்கினாலும், சில விளையாட்டுத் தொடர்கள் நீளமானவை என்பதால் செப்டம்பர் 19 முதலே துவங்கி நடைபெற்று வருகின்றன. அதில் மகளிர் டி20 கிரிக்கெட்டும் ஒன்று.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தோனேசியா - மங்கோலியா அணிகள் மோதிய டி20 போட்டி நடைபெற்றது. இந்தோனேசியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே சரியாக கிரீஸை சுற்றி பந்து வீச முடியாமல் மங்கோலிய அணி வீராங்கனைகள் தடுமாறினர்.
நிறைய வைடு மற்றும் நோ பால்களை போட்டு மங்கோலிய அணியினர் சொதப்பினர். அவர்களுக்கு போதிய கிரிக்கெட் பயிற்சி கிடைக்கவில்லை என்பது அவர்களது ஆட்டத்தில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. எனினும், தங்கள் பந்துவீச்சில் போராடி நான்கு விக்கெட்களை வீழ்த்தி ஆறுதல் அடைந்தது மங்கோலியா. இந்தோனேசியா அணி 20 ஓவர்களில் 187 ரன்களை குவித்தது.
மங்கோலியா அணி 38 வைடு மற்றும் 10 நோ பால் வீசி இருந்தனர். 120 பந்துகள் வீச வேண்டிய இடத்தில் மங்கோலியா அணி 168 பந்துகளை வீசி இருக்கிறது.
மங்கோலியா பேட்டிங்கில் ஓரளவாவது சமாளித்து ரன் சேர்க்கும் என எதிர்பார்த்த நிலையில், சுத்தமாக பந்து பேட்டில் படவே முடியாமல் தடுமாறினார்கள். ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படாத நிலையில் அந்த அணி 10 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தோனேசியா அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
ஐசிசி-யில் பதிவு செய்த நாடுகள் கிரிக்கெட் டி20 போட்டிகளில் ஆடும் பட்சத்தில் அந்த போட்டிகளுக்கு சர்வதேச அந்தஸ்து அளிக்கப்படும். அந்த வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து கிரிக்கெட் அணிகள் ஆடும் போட்டிகளுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டியும் சர்வதேச டி20 போட்டி ஆகும்.