மும்பை :ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிய போட்டிகள் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய ஆடவர் அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் உலககோப்பை தொடர் தொடங்கும் தருவாயில் இந்த ஆசிய போட்டிகள் நடைபெறுவதால் ஷிகர் தவான் தலைமையிலான அணியை அனுப்ப பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு 15 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதன்படி கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அதிரடி வீரர் ஜெய்ஷ்வால், ராகுல் திருபாதி ,திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமத்,ரவி பிஸ்னாய், ஆவிஸ் கான், முகேஷ் குமார் ,சிவம் மவி, சிவம் துபே, பிரபு சிம்ரன் சிங் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன் ஆகிய வீரர்கள் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மெயின் வீரர்களில் யாரேனும் காயம் காரணமாக இடம்பெற முடியவில்லை என்றால் இந்த வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். உலகக் கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது. இதனால் இந்த அணியில் இடம்பெற்று இருக்கும் நபர்கள் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பரிசீலனை செய்யப்பட மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் ஆர்ஸ்தீப் சிங், ஆவிஸ் கான்,ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் கலக்கிய ரிங்கு சிங் இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போன்று அஸ்வினை ஆசிய விளையாட்டு போட்டியின் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.