ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்முறையாக கிரிக்கெட் போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பிசிசிஐ சார்பாக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆசியப் போட்டிகள் நேற்று தொடங்கினாலும், கிரிக்கெட் போட்டிகள் செப்.19ஆம் தேதி முதலே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆசிய போட்டிகள் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை எதிர்த்து இலங்கை அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 46 ரன்களும், ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இந்தியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.
இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்வது மிகச்சிறந்த சாதனை. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த உயரங்களுக்கு இந்திய மகளிர் வீராங்கனைகள் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். அதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தங்கத்தை போல் இந்திய தேசியக் கொடியும் மகளிர் கிரிக்கெட் அணியால் ஜொலிப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், இந்திய மகளிர் அணிக்கு மனப்பூர்வ வாழ்த்துகள். ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் பிரிவில் முதல் தங்கத்தை வென்று புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். தங்க மங்கைகளின் சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று வாழ்த்தியுள்ளார். இதேபோல் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் வாழ்த்தியுள்ளனர்.