சென்னை: ஆஸ்திரேலிய பிட்சுகள் குறித் பில்டப்புகளை தாக்கித் தகர்த்து உலகக் கோப்பை தொடரில் நான்கு ஆசிய அணிகளும் அசத்தியிருப்பது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
அதிலும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை காலிறுதிக்குள் நுழைந்து விட்டன. பாகிஸ்தானும் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் நான்கு ஆசிய அணிகளும் கிரிக்கெட் நிபுணர்களை மிரள வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் பிட்ச்சுகள் பயங்கரமாக இருக்கும், பவுன்ஸ் அதிகமாக இருக்கும், பேட் செய்வது கஷ்டம், வெறும் சுழற்பந்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தரமான வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாத ஆசிய அணிகள் சிரமப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இன்று அத்தனையையும் தகர்த்து கம்பீரமாக நிற்கின்றன இந்த நான்கு அணிகளும்.
அதிலும் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே பிரமிக்க வைத்து வருகிறது. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி இந்திய வீரர்கள் கலக்கி விட்டனர். அதேபோலத்தான் இலங்கையும். அந்த அணியின் ஸ்டார் வீரர் சங்கக்கரா தலைமையில் அவர்களது பேட்டிங் எதிரணிகளை மிரட்டி வருகிறது.
குட்டி அணியாக கூறப்படும் வங்கதேசமும் பின்னிப் பெடலெடுத்து வருகிறது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மிரட்டல் வெற்றிகளைப் பெற்று வந்த அந்த அணி இன்று இங்கிலாந்தை ஓட ஓட விரட்டி உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே துரத்தியடித்து அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை காலிறுதிக்குள் நுழைந்து விட்டன. பாகி்ஸ்தானும் நுழைவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இதே ஆஸ்திரேலியாவில்தான் இந்தியா உலகக் கோப்பைத் தொடருக்கு முன்புதான் டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்புத் தொடரில் இந்தியா ஆடி படு தோல்வியைச் சந்தித்திருந்தது. அதேபோல நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை தோல்வியைச் சந்தித்திருந்தது. ஆனால் இந்த இரு அணிகளும் தற்போது உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஆடி வரும் விதம் அவர்களின் திறன் குறித்துப் பேசியவர்களின் வாயை அடைப்பது போல உள்ளது.
இதை விட முக்கியமானது வங்கதேசத்தின் எழுச்சிதான். சின்ன அணியோ, பெரிய அணியோ பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டு துவம்சம் செய்த அதன் ஆட்டத்திறன் பிரமிக்கவைத்துள்து.
மொத்தத்தில் ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்த ஆசிய சிங்கங்களும், புலிகளும் களத்தில் கலக்கி வருவதை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகள் பெரும் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.