எங்க கிட்ட எந்த ஸ்டாரும் கிடையாது.. டிராவிட்
அகமதாபாத்: எங்களை அன்டர்டாக்ஸ் என்ற பிறர் அழைப்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எங்களிடம் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லை. ஆனால் போராடும் குணம் கொண்ட வீரர்கள் எங்களிடம் இருப்பதால்தான் கடுமையான போட்டியை எங்களது அணியால் கொடுக்க முடிகிறது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மென்டார் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்தவர் டிராவிட். இந்த முறை குரு ஸ்தானத்தில் அமர்ந்து ஷான் வாட்சன் தலைமையிலான அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட சில சூப்பர் வீரர்கள் உள்ளதால் இந்த அணியும் போட்டிக் களத்தில் கடுமையான போட்டியைக் கொடுத்தபடி உள்ளது.
இந்த நிலையில் தனது அணி குறித்து டிராவிட் கூறியுள்ளதாவது...

அவரவர் வேலையை ஒழுங்கா செய்தாலே போதும்
அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதை அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். அதைச் சரியாக செய்தாலே போதும் அணி பலமாகி விடும்.

திட்டமிட்டு அட்டாக்
எதிரணிக்கு எதிராக ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் திட்டமிடுகிறோம். திட்டமிட்டு ஆடுகிறோம். போடும் திட்டங்களை சரியாக செயல்படுத்த முனைகிறோம்.

யாருமே ஸ்டார் இல்லை
எங்களது அணியைப் பாருங்கள் எந்த நட்சத்திர வீரரும் இங்கு இல்லை. ஆனால் அதுகுறித்து நாங்கள் கவலைப்படவும் இல்லை. அது எங்களைக் கவலைப்படுத்தவும் இல்லை. எல்லா அணியும் நல்ல அணிதான். அனைவருமே சிறந்த வீரர்கள்தான்.

போராடும் குணம்தான் தேவை
வெற்றிக்காக போராடும் குணம்தான் தேவை. அது எங்களது வீரர்களிடம் உள்ளது. இதனால்தான் நாங்கள் கடுமையான அணியாக உள்ளோம் என்றார் டிராவிட்.


Click it and Unblock the Notifications