“இங்கிலாந்துக்கு போய் விளையாடுங்க”.. ஜம்மு - காஷ்மீர் பவுலர் ஆகிப் நபியை அனுப்பி வைக்கும் பிசிசிஐ
மும்பை: ஜம்மு காஷ்மீர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி, இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காக விளையாட உள்ளார். நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரைத் தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாகவே அவர் கவுண்டி தொடரில் விளையாட இருக்கிறார்.
கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் ஆகிப் நபி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதுவரை 43 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2.9 எகானமியுடன் 162 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரது சிறப்பான பந்துவீச்சைத் தொடர்ந்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவரைத் தயார்படுத்த இங்கிலாந்தில் 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதே சமயம், சர்ரே அணி தற்போது சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளரைத் தேடி வந்த நிலையில், ஆகிப் நபியின் பந்துவீச்சு அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இதற்காக அவருக்கு இங்கிலாந்து விசா பெறும் பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விசா கிடைத்தவுடன் அவர் லண்டன் புறப்பட்டுச் சென்று சர்ரே அணியில் இணைவார். ஏற்கனவே இந்திய வீரர்களான மானவ் சுதார் வார்விக்ஷயர் அணிக்காகவும், குல்தீப் யாதவ் யார்க்ஷயர் அணிக்காகவும், அசுதோஷ் சர்மா மிடில்செக்ஸ் அணிக்காகவும் இங்கிலாந்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் பெங்களூருவில் தொடங்கும் துலீப் டிராபி அரையிறுதியில் வடக்கு மண்டல அணிக்காக விளையாட உள்ளார். வடக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணிக்கு எதிராகப் போட்டியிட உள்ளது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்குப் பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி தயார்படுத்த உள்ளது பிசிசிஐ.
இதன் மூலம், இலங்கை டெஸ்ட் தொடரில் உத்தேச அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட ஆகிப் நபி நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

