மும்பை: உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடினாலும், அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல் போகாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சர்வதேசத் தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா அண்மையில் அறிவித்துள்ளார்.
அண்மையில், ரஞ்சி கோப்பை வென்று காஷ்மீர் அணி வரலாற்று சாதனையை படைத்த நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அகுய்ப் நபியின் சிறப்பான ஆட்டமும் இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு முதல் ரஞ்சி கோப்பையை வென்று தந்ததில், பாரமுல்லாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகுய்ப் நபி முக்கியப் பங்காற்றினார்.

இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, இந்திய கிரிக்கெட்டிற்கும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட்டிற்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்புமுனையான தருணம். பிசிசிஐ-யின் முழு ஆதரவுடன் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தற்போது கிரிக்கெட்டின் கோட்டையாக மாறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் இதுவரை இல்லை என்பதை குறிப்பிட்ட சைகியா, ரஞ்சி கோப்பை வென்று இருப்பதன் மூலம், அவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, ஒரு பெரிய மைதானம் அங்கு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
பிசிசிஐ ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் உள்ளரங்க கிரிக்கெட் வசதிகளை மேம்படுத்தி வருகிறது. தற்போது, ஒரு சர்வதேசத் தரத்திலான மைதானம் அங்கு அமைக்கப்பட வேண்டியுள்ளது. எந்த இடத்தில் மைதானம் நிறுவப்பட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இது நிச்சயம் காலத்தின் கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே பிசிசிஐயின் முக்கிய நோக்கம். மாநிலங்களில் சரியான உள்கட்டமைப்பு வசதிகளும், உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சியும் இருந்தால் மட்டுமே சிறுவர் சிறுமிகள் தங்கள் திறமைகளை மெருகேற்ற சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிச்சத்திற்கு வந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று சைகியா விளக்கினார்.
அகுய்ப் நபியின் சர்வதேச கிரிக்கெட் வாய்ப்புகள் குறித்து பேசிய தேவாஜித் சைகியா, அகுய்ப் நபி மிகச் சிறப்பாக விளையாடி, அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். காலிறுதியில் ஐந்து விக்கெட்டுகளையும், அரையிறுதியில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர், இறுதிப்போட்டியிலும் அபாரமாகப் பந்துவீசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் என்று சைகியா பாராட்டினார்.
அகுய்ப் நபியின் சிறப்பான ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எந்த ஒரு திறமையான வீரரும் கவனிக்கப்படாமல் போவதைத் தடுக்க பிசிசிஐ ஒரு வலுவான தளத்தை அமைத்துள்ளது என்று சைகியா உறுதியளித்தார். தேர்வாளர்களின் முக்கிய கவனம் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் மீது மட்டுமே இருக்கும் என்றார்.
"இஷான் கிஷன் ஒரு சிறந்த உதாரணம்" என்று சைகியா சுட்டிக்காட்டினார். "அவர் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிச்சத்தில் இல்லாமல் இருந்தார். பின்னர் சிறப்பாக விளையாடினார், உடனடியாக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது அவர் எப்படி முன்னேறி, அணியின் வெற்றிக்கு நிலையாகப் பங்களிக்கிறார் என்பதைக் காணலாம்." இதன் மூலம் சிறிய மற்றும் அதிகம் பேசப்படாத இடங்களில் இருந்தும் பல வீரர்கள் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் எனவும் சைகியா கூறினார்.