ஹராரே: ஹராரேவில் நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.இன்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. நம்பர் 1 பாகிஸ்தான் அணியும் , நம்பர் 3 ஆஸ்திரேலியா அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அல்லாமல் பாகிஸ்தானின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கும் வேட்டு வைத்தது.டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்ந்து எடுத்தார்.ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் , முதல் ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி பந்துச்சின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த காரணத்தால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.ஆண்ட்ரு டை கடைசி ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 29 ரன்களை எடுத்தார்.அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்சின் அதிரடி ஆட்டத்தால் 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பின்ச் அட்டமிழக்காமல் 33 பந்துகளில் 68 ரன்களை குவித்தார்.இதில் 6 சிக்ஸர்களும் அடங்கும். இது அவரது 9 ஆவது அரைசதம் ஆகும்.ஆஸ்திரேலியா அணி 55 பந்துகளை மிச்சம் வைத்து பாகிஸ்தான் அணியை துவைத்து எடுத்தது. பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆஸ்திரேலியா அணியின் வெற்றி , அவர்களது தன்னம்பிக்கையை பலமடங்கு உயர்த்தி இருக்கும். இனிவரும் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அது மீண்டும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்..!!