பெர்த்: முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவைவிட 388 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது தென் ஆப்பிரிக்கா. இதன்மூலம், ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டது அந்த அணி.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளம் என வர்ணிக்கப்படும் பெர்த் நகரின் டபிள்யூ.ஏ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்களும் எடுத்து நீயா-நானா என போட்டி போட்டன.

எனவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய கட்டமாக மாறியது 2வது இன்னிங்ஸ். ஓபனர் ஸ்டீபன் குக் 12 ரன்னிலும், அடுத்ததாக களமிறங்கிய ஹசிம் ஆம்லா 1 ரன்னிலும் நடையை கட்டியதால் ஆஸ்திரேலிய கை ஓங்கியது. ஆனால் மற்றொரு ஓபனர் டீன் எல்கரும், பவுல் டுமினியும், நங்கூரம் போட்டு ஆஸ்திரேலிய பவுலர்கள் காதுகளில் புகை வரும் அளவுக்கு கடுப்பேற்றினர்.
இன்றைய ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்பிரிக்கா ஆணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 390 ரன்களை குவித்துள்ளது. இது 388 ரன் முன்னிலையாகும். நாளை 4வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா இதுவரை வீழ்த்தியதே கிடையாது. இம்முறையும் 2வது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுத்த தென் ஆப்பிரிக்கா இந்த சாதனையை தக்க வைக்கும் என்றே தெரிகிறது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எல்கர் 127, டுமினி 141 ரன்களை குவித்தது இந்த விஸ்வரூபத்திற்கு காரணம். டுப்ளசிஸ் 32 ரன்கள் எடுத்தார். நல்ல ஃபார்மிலுள்ள டி காக் 16 ரன்களுடனும், பவுலரான பிளாண்டர் 23 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.