கிங்ஸ்டவுன் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங்கை விடவும், ஆஸ்திரேலியா அணி வீரர்களின் ஃபீல்டிங்கே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் மட்டும் எண்ணற்ற ஃபீல்டிங் சொதப்பல்களை ஆஸ்திரேலியா வீரர்கள் செய்துள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வியை அடைந்துள்ளது. 149 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு ஆஸ்திரேலியா அணிக்கு நிச்சயம் என்று பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்திய அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெல்ல வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணி தொடக்க வீரர்களின் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாகும். ஏனென்றால் குர்பாஸ் - ஜத்ரான் இணைந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். சிறப்பாக ஆடிய குர்பாஸ் 60 ரன்களும், ஜத்ரான் 51 ரன்களும் விளாசினர்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு அந்த அணியின் ஃபீல்டிங்கே முக்கிய காரணமாகும். தொடக்க வீரர்களான குர்பாஸ், ஜத்ரான் இருவரையும் வீழ்த்த ஆஸ்திரேலியா அணிக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆடம் ஜாம்பா, ஆஸ்டன் அகர், டிம் டேவிட், மேத்யூ வேட் என்று ஏராளமானோர் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர்.
ஆஸ்திரேலியா வீரர்கள் மொத்தமாக 7 கேட்ச்கள், 4 ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டைவிட்டுள்ளனர். அதில் அகர் மட்டும் 2 கேட்ச்களை கோட்டைவிட்டதோடு, 2 பவுண்டரியையும் தடுக்கமால் இருந்திருக்கிறார். இந்த கேட்ச்களை பிடித்திருந்தாலே ஆஃப்கானிஸ்தான் அணியால் கூடுதலாக 30 ரன்களை சேர்த்திருக்க முடியாது.
இந்த பிட்சில் கம்மின்ஸ் ஸ்லோயர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்திய போதே, அந்த அணி நிர்வாகம் கணித்திருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து விக்கெட்டை கொடுத்ததே தோல்விக்கு இரண்டாவது காரணமாகவும் அமைந்துள்ளது.