லாகூர்: சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை ஆஸ்திரேலியா செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழையால் தடைப்பட்டபோது, ஆஸ்திரேலியா அணி 12.5 ஓவர்கள் வரை பேட்டிங் செய்திருந்தது. அதற்குள் இந்த இமாலய சாதனையை செய்துள்ளது.
இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. 274 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா அணி, முதல் 10 ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்தது. மழை பெய்வதற்கான வாய்ப்பு இருந்ததால், அதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடியது.

குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அரை சதம் அடித்தார். இதன் மூலம், பவர் பிளே ஓவர்களான முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே முதல் 10 ஓவர் பவர் பிளேவில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா செய்துள்ளது.
இதற்கு முன், 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 ரன்கள் எடுத்திருந்தது. அதுவே அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராக இருந்தது. அதை தற்போது ஆஸ்திரேலிய அணி முறியடித்துள்ளது. இந்த போட்டியில் 12.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 109 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.
அதன் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியா ஏற்கனவே 3 புள்ளிகளுடன் இருந்தது. தற்போது நான்கு புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி மற்றும் இந்தியா - நியூசிலாந்து போட்டி மட்டுமே நடைபெற உள்ளன. இதில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் நெட் ரன் ரேட் ஆப்கானிஸ்தான் அணியை விட குறையாமல் பார்த்துக் கொண்டால் அரை இறுதிக்கு முன்னேறி விடலாம்.