லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வந்தது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியா அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
வெறும் 30 நிமிடம் மட்டுமே மழை பெய்து ஓய்ந்தது. ஆனால் மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால், ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒருவேளை போட்டி முழுமையாக நடந்திருந்தால் ஆப்கானிஸ்தான் அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டியின் கதையே மாற்றி இருக்கக்கூடும். ஆனால் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மைதானம் புனரமைப்பதற்காக ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கில் நிதி வாங்கி செலவு செய்தது.
ஆனால் மைதானத்திற்கு தேவையான தார்ப்பாய்களை கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாங்கவில்லை. இல்லை என்றால் பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் இருப்பது போல தண்ணீரை வெளியேற்றும் டிரைனேஜ் வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக வெறும் 30 நிமிடம் பெய்த மழைக்கு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு போட்டி ரத்து ஆனது.
இதனால் மற்ற நாட்டு ரசிகர்கள் அல்லாமல் பாகிஸ்தான் ரசிகர்களே கடுப்பாகி திட்டி இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டை மட்டுமே நமது நாடு விளையாடுகிறது. இதுவே பிரபலமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது மழையால் மைதானம் பாதிக்கப்படுவதை பார்க்கும் போது உண்மையாகவே வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு ரசிகர் ஒருவர்,இருப்பதிலேயே இதுதான் மோசமான ஐசிசி தொடர். இனி 50 ஆண்டுகள் ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்கக்கூடாது என்று குற்றச்சாட்டி இருக்கிறார். மேலும் சிலர் தார்ப்பாய் எடுக்கும்போது கூட மழைநீர் மைதானத்தில் சிந்தும் அளவுக்கு இருக்கிறது. பாகிஸ்தான் ஐசிசி தொடரை நடத்துவதற்கு தகுதியே இல்லாத நாடு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டில் மைதானம் மேற்கூரை தானாகவே மூடி திறக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் இருக்கக்கூடிய மைதானங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தான் அப்படி ஒரு மைதானம் இதுவரை அமைக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் மார்வெல் என ஒரு கிரிக்கெட் மைதானம் மட்டும் மேற்கூறையுடன் இருக்கிறது. ஆனால் அங்கு சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.