லாகூர்: ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய், சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் போட்டி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் வென்றிருந்தார். தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்திருந்தார். இந்தத் தொடரில், அவர் முந்தைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம், ஒரே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு ஆல் ரவுண்டர் ஒருமுறை 50-க்கும் அதிகமான ரன்களையும், ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன், 1998 ஆம் ஆண்டு உலகின் ஜாம்பவான் ஆல் ரவுண்டரான ஜாக்கஸ் காலிஸ் இந்த சாதனையை செய்திருந்தார். அவர் அப்போது இலங்கை அணிக்கு எதிராக அரை இறுதியில் 100 பந்துகளில் 113 ரன்கள் அடித்திருந்தார். அடுத்து இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம், ஒரே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 50-க்கும் அதிகமான ரன்கள் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆல் ரவுண்டர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் செய்திருந்தார். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த சாதனையை அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 63 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. 12.5 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணி ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது.