செண்ட் லூசியா : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு, அந்த அணியின் பவுலிங் ஆலோசகராக பணியாற்றி வரும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிராவோ முக்கியக் காரணமாக அமைந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு நாளும் ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பார்க்கப்பட்ட சூழலில், திடீரென ஆஃப்கானிஸ்தான் அணி விஸ்வரூபம் எடுத்துள்ளது. சாம்பியன் அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பிட்ச் ஸ்லோயர் பந்துகளுக்கு உதவியாக இருந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் மற்றும் மீடியம் வேகத்தில் வீசக் கூடிய பவுலர்களுக்கு சாதகம் ஏற்பட்டது. இதனை புரிந்து கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், உடனடியாக குல்புதின் நைப்பை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
இதன்பின் பவுலிங் செய்து ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பெற்று அசத்தினார் குல்புதின் நைப். கிட்டத்தட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோவின் பவுலிங்கை பார்ப்பது போல் அமைந்தது குல்புதின் நைப்பின் ஸ்பெல்.
பவுண்டரி லைனில் நின்று கொண்டு பிராவோ ஒவ்வொரு பவுலருக்கும் ஆலோசனை அளித்து கொண்டே இருந்தார். இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அஜய் ஜடேஜாவை எப்படி ஆஃப்கானிஸ்தான் அணி ஆலோசகராக கொண்டு வந்ததோ, அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடருக்கு பிராவோவை ஆலோசகராக நியமித்து விளையாடி வருகிறது.
இதன் பலனையும் ஆஃப்கானிஸ்தான் அணி அறுவடை செய்து வருகிறது. நியூசிலாந்து அணியை ஏற்கனவே குரூப் சுற்றில் முடித்துக் கட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி, தற்போது சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையே பழி தீர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி பவுலர்களின் வளர்ச்சி ஒவ்வொரு போட்டிக்கு முன்னேற்றம் கண்டு வருவதற்கு பிராவோவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.