அடிலெய்ட்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கோளாறு கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில் அவுட் ஆன ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி, தொழில்நுட்ப பிழையால் தப்பித்துச் சதம் விளாசியது இங்கிலாந்து அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும் தான் அவுட் என்பது தெரியும், ஆனாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால் தான் தொடர்ந்து ஆடி சதம் அடித்ததாக அலெக்ஸ் கேரி கூறியது இங்கிலாந்து அணியை மேலும் உசுப்பேற்றி இருக்கிறது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எனத் தடுமாறிக் கொண்டிருந்தது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி களத்தில் இருந்தார். ஜோஷ் டங் வீசிய 63-வது ஓவரின் முதல் பந்தில், கேரி பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் கையில் தஞ்சமடைந்தது.
இங்கிலாந்து வீரர்கள் பலமாக அப்பீல் செய்தனர். ஆனால் கள நடுவர் அவுட் இல்லை என்று கூறிவிட்டார். பந்து பேட்டில் பட்ட சத்தம் தெளிவாகக் கேட்டதால், இங்கிலாந்து அணி உடனடியாக 'ரிவ்யூ' செய்தது.
மூன்றாவது நடுவர் சோதனையின் போது, 'ஸ்னிக்கோ மீட்டர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதில் ஒரு தவறு நடந்தது. பந்து பேட்டைக் கடந்து செல்லும் போது வரைபடத்தில் எந்த அசைவும் ஏற்படவில்லை. மாறாக, பந்து பேட்டிற்கு வெகு தொலைவில் இருக்கும் போதே வரைபடத்தில் சத்தம் இருப்பதாகக் காட்டியது. வீடியோவிற்கும், ஒலிக்கும் சம்பந்தமே இல்லாததால், மூன்றாவது நடுவர் வேறு வழியின்றி கள நடுவரின் தீர்ப்பையே உறுதி செய்தார். இதனால் அலெக்ஸ் கேரி நாட்-அவுட் ஆனார்.
போட்டி முடிந்த பிறகு, இந்தத் தொழில்நுட்பத்தை நிர்வகிக்கும் பிபிஜி ஸ்போர்ட்ஸ் (BBG Sports) நிறுவனம் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. "அலெக்ஸ் கேரி பந்தை அடித்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த நேரத்தில் ஸ்னிக்கோவை இயக்கிய நபர், பேட்ஸ்மேன் பக்கம் இருக்கும் ஸ்டம்ப் மைக்கை ஆன் செய்வதற்குப் பதிலாக, பந்துவீச்சாளர் பக்கம் இருந்த மைக்கைத் தவறுதலாகத் தேர்வு செய்துவிட்டார். இதனால் ஆடியோவில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. இந்தத் தவறுக்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
72 ரன்களில் இருந்தபோது இந்த கண்டத்தில் இருந்து தப்பித்த அலெக்ஸ் கேரி, கிடைத்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அபாரமாக ஆடி தனது முதல் ஆஷஸ் சதத்தைப் பதிவு செய்தார். 94-4 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா, இவரது சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 326-8 என்ற வலுவான நிலையை எட்டியது.
போட்டிக்குப் பின் பேசிய அலெக்ஸ் கேரி, "பந்து பேட்டில் பட்டது எனக்கும் தெரிந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு எனக்குச் சாதகமாக முடிந்தது, கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்" என்று கூறினார். ஏற்கனவே முதல் டெஸ்டிலும் டிஆர்எஸ் சர்ச்சை வெடித்த நிலையில், இப்போது மீண்டும் தொழில்நுட்பம் சொதப்பியிருப்பது இங்கிலாந்து ரசிகர்களைக் வெறுப்பேற்றியுள்ளது.