லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி என்றாலே ராசியில்லாத அணி என்ற பெயரைப் பெற்றிருந்த ஆஸ்திரேலியா, இந்த வெற்றியின் மூலம் அந்த பெயரை மாற்றியுள்ளது.
கடைசியாக 2009 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் பல்வேறு காரணங்களால் 2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் குரூப் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தற்போது அந்த மோசமான நிலைக்கு முடிவு கட்டி இருக்கிறது ஆஸ்திரேலியா.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவில் இடம் பெற்று இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இப்போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி 165 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் 68 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது. 352 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்கம் சிறப்பாக அமையவில்லை.
டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் மேத்யூ ஷார்ட் அதிரடியாக ஆடி 63 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லாபுஷேன் 47 ரன்கள் சேர்த்தார். ஜோஸ் இங்லிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று சதம் அடித்தார். அலெக்ஸ் கேரி 69 ரன்கள் சேர்த்தார்.
கடைசி 50 பந்துகளில் 70 ரன்கள் தேவை என்ற நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஸ் இங்லிஸ் அதிரடியாக ஆடினர். ஜோஸ் இங்லிஸ் சதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டியது. ஜோஸ் இங்லிஸ் 86 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசினார். மேக்ஸ்வெல் 15 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார்.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது.