லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக ஆடி அதிரடி சதம் அடித்தார். மேலும், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறார் பென் டக்கெட்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் இதுவே பென் டக்கெட்டின் முதல் போட்டியாகும். அதில் அவர் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. லாகூரில் பேட்டிங் செய்ய எளிதான சூழலில் பென் டக்கெட் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 17 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே 150 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை பென் டக்கெட் செய்தார். இதற்கு முன் எந்த வீரரும் சாம்பியன்ஸ் டிராபியில் 150 ரன்கள் அடித்ததில்லை. அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி எளிதாக 300 ரன்களை தாண்டியது.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களிலேயே இங்கிலாந்து அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார். இதற்கு முன் ஜோ ரூட் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக 133 ரன்கள் அடித்திருந்தது அதிகபட்சமாக இருந்தது. அதை முறியடித்தார் பென் டக்கெட்.
பென் டக்கெட் 165 ரன்கள், ஜோ ரூட் 68 ரன்கள் குவித்ததை அடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 352 ரன்கள் என்ற இமலாய இலக்கை நிர்ணயித்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் நாதன் எல்லீஸ் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். மற்றவர்கள் அனைவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். லாபுஷேன் மற்றும் ஆடம் ஜாம்பா தங்கள் சுழற்பந்து வீச்சின் மூலம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.