மெல்போர்ன்: 2025 ஆஷஸ் தொடரில் மண்ணைக் கவ்வியது போதாதென்று, இப்போது இந்திய அணியையும் வம்புக்கு இழுத்து இங்கிலாந்து அணியின் மானத்தை வாங்கியிருக்கிறார் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 எனத் தொடரை இழந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
மெல்போர்னில் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்டிலும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் திணறியது. இங்கிலாந்தின் இந்த மோசமான ஆட்டத்தைப் பார்த்து கடுப்பான முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக், பயிற்சியாளர் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து நிர்வாகத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார். இதில் அவர் இந்திய அணியையும் வம்புக்கு இழுத்துள்ளார் என்பதுதான் முக்கியம்.

இங்கிலாந்து அணியின் தற்போதைய தோல்விக்குக் காரணம், அவர்கள் தங்களைத் தாங்களே அதிகமாக மதிப்பிட்டுக் கொண்டதுதான் என்கிறார் குக். இதற்கு உதாரணமாக சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரைச் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தத் தொடர் 2-2 என டிராவில் முடிந்தது.
இதுகுறித்து பேசிய குக், "நாங்கள் இந்தியாவுடன் தொடரை டிரா செய்தோம் என்று பெருமை பேசிக்கொண்டோம். ஆனால், உண்மையில் அந்த இந்திய அணி ஒன்றும் அவ்வளவு சிறந்த அணி கிடையாது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஒரு மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த அனுபவமில்லாத இந்திய அணி அது.
அந்த அணியிடம் நாம் டிரா செய்தோம். ஆனால், அதே இந்திய அணி அதன்பிறகு தென்னாப்பிரிக்காவிடம் சென்று அடிவாங்கியது. அப்படிப்பட்ட அணியிடமே நாம் திணறினோம் என்றால், நமது நிலைமை என்னவென்று யோசித்துப் பாருங்கள். இப்போது ஆஷஸ் தொடரில் எதார்த்தம் நம் முகத்தில் அறைந்துள்ளது" என்று காட்டமாகப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்தின் அதிரடி ஆட்டமான 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையையும் விமர்சித்தார். "ஆரம்பத்தில் இது சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், ஆஸ்திரேலியா போன்ற ஒரு துல்லியமான பந்துவீச்சுக்கு எதிராகத் திட்டம் இல்லாமல் வெறும் அதிரடியை மட்டும் நம்பிப் பயனில்லை. அழுத்தம் வரும்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரணடைந்து விடுகிறார்கள்" என்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவையும் குக் விளாசினார். "கவுண்டி கிரிக்கெட்டிற்கும் தேசிய அணிக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் ரன் குவிப்பவர்களுக்கும், விக்கெட் எடுப்பவர்களுக்கும் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை.
மெக்கல்லம் மற்றும் ராப் கீ ஆகியோர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், ஆஷஸ் போன்ற ஒரு மிகப்பெரிய தொடருக்குத் தயாராகும்போது, அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது" எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் குக். ஆஷஸ் தோல்வியின் விரக்தியில் இருக்கும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு, குக்கின் இந்த விமர்சனம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளது.