லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் பென் டக்கெட் அடித்த சதத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவர்களில் 10 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். பென் டக்கெட் 165 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணி சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தனது முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஆஸ்திரேலியா அணி கடந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை என்ற மோசமான புள்ளி விவரத்துடன் இந்த போட்டியில் களம் இறங்கியது.

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஃபிலிப் சால்ட் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜேமி ஸ்மித் 15 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 68 ரன்கள் எடுத்தார். அதன் பின் வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன. ஹாரி புரூக் 3, ஜோஸ் பட்லர் 23, லியாம் லிவிங்க்ஸ்டன் 14, பிரைடன் கார்ஸ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விக்கெட் வீழ்ச்சிக்கு இடையே துவக்க வீரர் பென் டக்கெட் 165 ரன்கள் குவித்தார். அவர் 48 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் 10 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். இதை அடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களில் பென் டிவார்ஷியஸ் 3, ஆடம் ஜாம்பா 2, மார்னஸ் லாபுஷேன் 2 கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். நாதன் எல்லீஸ் விக்கெட் வீழ்த்தாத போதும் 10 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கட்டுக் கோப்பாக வீசி இருந்தார்.