லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நான்காவது நாளான இன்று (பிப்ரவரி 22), குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குரூப் பி பிரிவில் முன்னதாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள போட்டி நடைபெற உள்ளது.

குரூப்: பி
அணிகள்: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
இடம்: கடாபி மைதானம், லாகூர்
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 2:30 மணி
இரு அணிகளுமே மோசமான ஃபார்மில் இருப்பதால், இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஃபார்மை .மீட்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை முதல் சமீபத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரை, இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. அதிரடி ஆட்டத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்த சாம்பியன்ஸ் டிராபியில் தனது அணுகுமுறையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லம் திட்டத்தின் அடிப்படையில் ஆடும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தாலும் அதிரடி ஆட்டத்தை தான் ஆடுவோம் என பிடிவாதமாக இருக்கிறது. அந்த பிடிவாதத்திற்கான முடிவாக சாம்பியன்ஸ் டிராபி இருக்கும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மறுபுறம் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அணியிலிருந்து விலகியிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ளது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் வரிசை என்ன என்பதே குழப்பத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணியின் சமநிலை கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் மீண்டு வருமா? என்று பார்க்கலாம்.
கிரிக்கெட்டின் பரம எதிரிகளாக அறியப்படும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரண்டு அணிகளுமே வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால், ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.