லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 351 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே மிகப்பெரிய ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை செய்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. பொதுவாகவே பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படுவதுண்டு.

இதற்கு முன் கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 320 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோலவே இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது.
351/8 - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, லாகூர் 2025
347/4 - நியூசிலாந்து vs அமெரிக்கா, தி ஓவல் 2004
338/4 - பாகிஸ்தான் vs இந்தியா, தி ஓவல் 2017
331/7 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, கார்டிஃப் 2013
323/8 - இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, செஞ்சுரியன் 2009
இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணி அமெரிக்காவுக்கு எதிராக 347 ரன்கள் எடுத்திருந்ததே சாம்பியன்ஸ் டிராபியில் மிகப்பெரிய ஸ்கோராக இருந்தது. சுமார் 21 ஆண்டு கால சாதனையை முறியடித்து இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக ஆடி 143 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்தார். அவர் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் 78 பந்துகளை சந்தித்து 68 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நாதன் எல்லீஸ் 10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் இருந்ததே ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. ஆடம் ஜம்பா மற்றும் லாபுஷேன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தனர்.