பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடுத்து வரும் பகல் - இரவு டெஸ்ட் போட்டிக்குச் சரியான பயிற்சி ஆட்டம் இல்லாமல் செல்வது "தொழில்முறை அற்ற செயல், சிறுபிள்ளைத்தனமானது" என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான் கடுமையாகச் சாடியுள்ளார்.
பெர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி வெறும் இரண்டே நாட்களில் ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பேனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இது "பிங்க் பந்து" (Pink Ball) கொண்டு விளையாடப்படும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாகும். பொதுவாகவே ஆஸ்திரேலிய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்குகிறது. இதுவரை விளையாடிய 14 பகல் - இரவு போட்டிகளில் 13-ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக இங்கிலாந்திற்கு எதிரான மூன்று பிங்க் பந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
இவ்வளவு பெரிய சவாலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எந்தவொரு பயிற்சி ஆட்டமும் திட்டமிடப்படவில்லை என்பதுதான் மைக்கேல் வானின் கோபத்திற்குக் காரணம்.
இங்கிலாந்து லயன்ஸ் (இளம் வீரர்கள் அணி) மட்டுமே ஒரு பகல் - இரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான முக்கிய டெஸ்ட் அணிக்கு எந்தப் பயிற்சி ஆட்டமும் இல்லை. இது குறித்துப் பேசிய மைக்கேல் வான்,
"பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் இல்லாமல் செல்வது முட்டாள்தனமானது. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறை. இரண்டு நாட்கள் பிங்க் பந்தில் பயிற்சி ஆட்டம் விளையாடுவதால் உங்களுக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? பயிற்சி ஆட்டங்களின் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வலைப்பயிற்சியில் பெற முடியாது. இனியாவது விழித்துக்கொண்டு ஒரு இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தையாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
முதல் போட்டியின் தோல்வி குறித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தோல்வி இவ்வளவு வேகமாக வந்ததை நம்ப முடியவில்லை என்று கூறியிருந்தார். இதற்கிடையில், மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில், "இங்கிலாந்து அணி இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் கூட்டணியால் எப்பேர்ப்பட்ட சூழலிலும் மீண்டு வர முடியும். கடந்த முறை 0-2 எனப் பின்தங்கியிருந்தும் தொடரைச் சமன் செய்தனர். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டு வருவது கடினம், அதற்கு மன உறுதியுடன் போராட வேண்டும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.