பெர்த்: 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களின் இதயத்தை உடைத்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் 2025 ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியைப் பந்தாடினார். அவரது இந்த அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்த முன்னாள் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பழைய நினைவுகளைக் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
பெர்த்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 205 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்குப் பதிலாக ட்ராவிஸ் ஹெட் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

டெஸ்ட் போட்டி என்பதை மறந்து டி20 பாணியில் பேட்டை சுழற்றிய ட்ராவிஸ் ஹெட், வெறும் 83 பந்துகளில் 123 ரன்களைக் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். இவரது அதிரடியால் ஆஸ்திரேலியா 29 ஓவர்களுக்குள் இலக்கை எட்டி, வெறும் இரண்டே நாட்களில் போட்டியை வென்றது.
ட்ராவிஸ் ஹெட்டின் இந்த இன்னிங்ஸைப் பார்த்து வியந்த ரவி சாஸ்திரி, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ட்ராவிஸ் ஹெட்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (உலகக் கோப்பையில்) என் நாட்டை அமைதியாக்கினீர்கள். இன்று கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வடிவமான டெஸ்ட் போட்டியில், மீண்டும் அதைச் செய்துள்ளீர்கள். என்ன ஒரு சரவெடியான ஆட்டம்! தலைவணங்குகிறேன். இங்கிலாந்து... இது மிகவும் ஸ்பெஷலான ஒன்று," என்று பதிவிட்டுள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து இந்தியாவின் கனவைத் தகர்த்ததை நினைவுபடுத்தும் விதமாகவும், அதே சமயம் அவரது திறமையைப் பாராட்டும் விதமாகவும் ரவி சாஸ்திரியின் கருத்து அமைந்தது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ட்ராவிஸ் ஹெட்டுடன் இணைந்து தொடக்க வீரராகக் களமிறங்கும் இந்தியாவின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் இந்தப் பாராட்டில் இணைந்துள்ளார். "ஹெட் ஆடத் தொடங்கினால் அது பார்ப்பதற்கு மிகவும் எளிதாகத் தெரியும். இது ஒரு உயர்தரமான சதம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.