பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் போராடி ஃபாலோ - ஆனை தவிர்த்தது. நான்காவது நாளில் மட்டும் மூன்று முறை மழை குறுக்கிட்டது.
இதனிடையே இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. பெரும் பரபரப்புக்கு இடையே பும்ரா மற்றும் ஆகாஷ்தீப் அதிரடியாக ஆடி ஃபாலோ ஆன் தவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு தலைவலியாக மாறினர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 445 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி எடுத்த ஸ்கோரை விட இந்திய அணி 200 ரன்கள் குறைவாக எடுக்கும் பட்சத்தில் ஃபாலோ ஆன் பெறும் என்ற நிலை இருந்தது.

அப்போதைய சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனமாக காட்சி அளிக்கும் நிலையில் இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்றால் 200 ரன்களுக்கும் மேல் பின் தங்கி இருக்கும். அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் கொடுத்து இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வைத்து விரைவாக ஆல் அவுட் செய்ய முயற்சிக்கும் திட்டத்தில் இருந்தது.
அதன் மூலம் மூன்றாவது டெஸ்ட்டை ஆஸ்திரேலியா எளிதாக வெல்லலாம் என்ற கனவில் இருந்தது. மழைக்கு நடுவே இந்தப் போட்டி நடைபெற்று வருவதால் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் திட்டத்தை கையில் எடுத்தது. இந்திய அணி 245 ரன்களை கடந்து விட்டால் அடுத்து ஆல் - அவுட் ஆனாலும் அதன் பின் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியை டிராவை நோக்கி கொண்டு செல்ல முடியும்.
இந்த சூழ்நிலையில் பும்ரா மற்றும் ஆகாஷ்தீப் இணைந்து அபாரமாக ஆடினர். ஆகாஷ் தீப் 75 வது ஓவரில் ஒரு ஃபோர் அடித்தார். அத்துடன் இந்திய அணி ஃபாலோ ஆன் சிக்கலில் இருந்து மீண்டது. தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அந்த அணி அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. கடைசி நாள் ஆட்டம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்தப் போட்டி டிராவை நோக்கி செல்லத் துவங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பாதியில் விலகி இருக்கிறார். எனவே, ஆஸ்திரேலிய அணி இரண்டு முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு ஆடி வருகிறது. இதுவும் இந்திய அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.