மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சில் மோசமாக செயல்பட்டது ஒருபுறம் இருக்க தற்போது அதே பந்துவீச்சால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 86 ஓவர்கள் மட்டுமே வீசியது. டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் சூழ்நிலைகள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் 90 ஓவர்களை வீசி இருக்க வேண்டும். ஆனால், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 86 ஓவர்களை மட்டுமே வீசியது.

இந்திய அணி 4 ஓவர்கள் குறைவாக வீசி இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவு ஓவர்களை வீசி இருக்காவிட்டால் அந்த அணியின் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் எத்தனை ஓவர்கள் குறைவாக வீசப்பட்டதோ அத்தனை புள்ளிகள் திரும்ப எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் குறைவாக வீசி இருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இதிலிருந்து இந்திய அணியால் தப்பிக்கவும் முடியும்.
டெஸ்ட் போட்டியின் முடிவில் தான் எத்தனை ஓவர்கள் குறைவாக வீசப்பட்டு இருக்கிறது என்ற கணக்கு சரி பார்க்கப்படும். அந்த வகையில் இந்திய அணி இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவிலோ அல்லது இரண்டாவது இன்னிங்ஸ் முடிவிலோ விரைவாக பந்து வீசி இந்த நான்கு ஓவர் இழப்பை ஈடு செய்யலாம்.
எனினும், இது ஒரு வகையில் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்படுத்தும். ஏற்கனவே, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களுக்கும் மேல் குவித்து இந்திய அணிக்கு தலைவலியாக மாறி உள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்தனர். அதனாலேயே இந்திய அணி பந்து வீசவும், திட்டங்களை தீட்டவும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. அதனாலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 90 ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை.