மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி உடைந்து போய் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் இருந்து பாதி தொடரில் அவர் நீக்கப்பட்டதை அடுத்து அவர் மனம் நொந்து போய் பேசி இருக்கிறார். மெல்போர்னில் நடக்க உள்ள நான்காவது டெஸ்ட்டில் ஆடப் போவதை பற்றி நேற்று முன்தினம் ஊடகத்திடம் பேசி இருந்தார். ஆனால், இப்போது ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரராக உஸ்மான் கவாஜா உடன் களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி இருந்தது.

சரியான துவக்க வீரர்கள் யாரும் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி திணறி வந்தது. இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் சிறந்த பேட்டிங் டெக்னிக்கை வைத்திருக்கும் நாதன் மெக்ஸ்வீனியை தேர்வுக் குழுவினர் அணியில் சேர்த்து வாய்ப்பு அளித்தனர். ஆனால், அவர் உள்ளூர் போட்டிகளில் மூன்றாம் வரிசையில் மட்டுமே அதிக அளவில் பேட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆகி 6 இன்னிங்ஸ்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து அவரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அணியில் இருந்தே நீக்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அவருக்கு பதிலாக இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மெல்போர்னில் நடைபெற உள்ள நான்காவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட தான் ஆர்வமாக இருப்பதாக நாதன் மெக்ஸ்வீனி இரண்டு நாட்களுக்கு முன்பு பேசி இருந்தார். ஆனால், இப்போது அணியில் தனக்கு இடம் இல்லை என்பதை அறிந்து அவர் உடைந்து போய் இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசி இருக்கிறார். "நான்காவது போட்டியில் விளையாடப் போவதில்லை என்பதை அறிந்து உடைந்து போனேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு உண்மையானது. ஆனால், நான் எப்படி நினைத்தேனோ அப்படி நடக்கவில்லை. இது எல்லாம் ஒரு பகுதி தான். நான் எனது தலையை குனிந்து கொண்டு வலைப்பயிற்சியில் ஈடுபடப் போகிறேன்." என்று கூறி இருக்கிறார் மெக்ஸ்வீனி.
மேலும், "நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த இடம் பாதுகாப்பாக இருக்காது. நான் சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விளையாடவில்லை. எனது வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த முறை நான் நிச்சயம் கடினமாக உழைப்பேன்." எனக் கூறி இருக்கிறார் நாதன் மெக்ஸ்வீனி.