மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட துவக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிக் பாஷ் லீக் தொடரில் மிரட்டல் ஆட்டம் ஒன்றை ஆடி இருக்கிறார்.
தனக்கு அணியில் இடம் மறுக்கப்பட்ட நிலையில் பிக் பாஷ் லீக் தொடரில் 49 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து தனது அணியான பிரிஸ்பேன் ஹீட்-ஐ வெற்றி பெற வைத்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன இந்த தொடரில் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகம் பெற்றார். அவரை ஆஸ்திரேலிய அணி துவக்க வீரராக களம் இறக்கியது.
உள்ளூர் போட்டிகளில் மூன்றாம் வரிசையில் மட்டுமே ஆடிய அனுபவம் உள்ள நாதன் மெக்ஸ்வீனி முதன்முறையாக இந்திய அணிக்கு எதிராக துவக்க வீரராக களம் கண்டார். ஆனால், மூன்று போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதை அடுத்து நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
அதனால் மனம் உடைந்த நிலையில் இருந்தார் நாதன் மெக்ஸ்வீனி. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தனது அணியான பிரிஸ்பேன் ஹீட்டில் உடனடியாக இணைந்தார். அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் பயிற்சியாளர் பங்கேற்று ஆடினார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. 175 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடியது பிரிஸ்பேன் ஹீட் அணி, அந்த அணி 3.1 ஓவரில் 19 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது.
அப்போது மூன்றாம் வரிசையில் இறங்கிய நாதன் மெக்ஸ்வீனி நிலைத்து நின்று ரன் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 49 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். மேலும், தனது அணியை வெற்றி பெறவும் வைத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழுவினருக்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாதன் மெக்ஸ்வீனி-க்கு டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் கூட வாய்ப்பு அளித்திருக்கலாம் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.