பிரிஸ்பேன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய உடன் ஸ்டீவ் ஸ்மித் மிகப்பெரிய தவறை செய்தார். அதை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விரைவாக ஆட்டம் இழந்திருக்கும்.
பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. ரோஹித் மற்றும் கே எல் ராகுல் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் துவங்கியது. அப்போது கே எல் ராகுல் முதல் பந்தை சந்தித்தார். பாட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை ராகுல் எட்ஜ் செய்தார்.
அந்த பந்து எட்ஜ் ஆகி நேராக ஸ்லிப்பில் நின்று இருந்த ஸ்டீவ் ஸ்மித் கைகளுக்கு சென்றது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் பந்தை தவறவிட்டார். பந்து அவர் கைகளுக்குள் சென்று பின் கீழே விழுந்தது. அதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் செய்த தவறை எண்ணி கே எல் ராகுல் தலையில் கை வைத்தார்.
அப்போது 33 ரன்கள் எடுத்து இருந்த ராகுல் அவுட் ஆவதில் இருந்து தப்பினார். அதன் பின் அவர் அரை சதம் அடித்து தொடர்ந்து ரன் சேர்த்தார். ஒருவேளை ஸ்டீவ் ஸ்மித் அந்த கேட்ச்சை பிடித்து இருந்தால் இந்திய அணியின் நிலை மோசமாகி இருக்கும். அடுத்த சில ஓவர்களில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த நிலையில், அதற்கு முன்பாக கே எல் ராகுலும் ஆட்டம் இழந்து இருந்தால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கும்.
அதன் பின் அரை சதம் அடித்த ராகுல் சதத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார். எனினும், 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜடேஜா அவருடன் கூட்டணி அமைத்து 26 ரன் சேர்த்து இருந்தார்.