
நடராஜன்
நடராஜனை இரண்டு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு யார் என்றே தெரியாது. ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்கும் முன் பலருக்கும் இவரை தெரியாது. ஐபிஎல் தொடரிலும் இவர் ஆடும் ஹைதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், புவனேஷ்வர்குமார், ரஷீத் கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது என்று முன்னணி பவுலர்கள் இருந்தனர். இதனால் நடராஜனை தொடக்கத்தில் யாருமே கவனிக்கவில்லை.

ஐபிஎல் எப்படி
ஆனால் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஓவரில் இவர் துல்லியமாக யார்க்கர் போடுவதை பார்த்து மொத்தமாக ஐபிஎல் உலகம் அரண்டு போனது. பிரிட்லி, வார்னே, இயான் பிஷப் போன்ற ஜாம்பவான் வீரர்கள் கூட கொண்டாடும் அளவிற்கு நடராஜன் பவுலிங் இருந்தது. ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர் பந்துகளை வீசிய நம்பர் 1 வீரர் இவர்தான்.

டெத் ஓவர்
முக்கியமாக டெத் ஓவர்களில் பும்ரா, போல்ட், ஷமிக்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக பவுலிங் செய்த வீரரும், இந்திய அணியில் இடம்பெறாமல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரரும் இவர்தான். ஆனால் இந்திய அணிக்கு இவர் நேரடியாக தேர்வாகவில்லை. வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலக டி 20 அணியில் நடராஜன் வந்தார். பின் சைனியின் காயம் காரணமாக நடராஜன் ஒருநாள் அணிக்குள்ளும் இடம்பிடித்துள்ளார்.

டீமில் எடுத்துள்ளார்
இவர் மீது நம்பிக்கை வைத்து தற்போது கோலியே இவரை டீமில் எடுத்துள்ளார். கோலியின் கீழ் இவர் களமிறங்கி விளையாட உள்ளதால், வரும் நாட்களில் இவருக்கு அதிக அளவில் கிரிக்கெட் வாய்ப்புகள் கிடைக்கும். தனக்கு நெறுக்கமான சைனியை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நடராஜனை கோலி இறக்கி உள்ளார் என்றால் நடராஜனுக்கு எவ்வளவு திறமை இருக்கும் என்று பாருங்கள்.

எப்போது அறிமுகம்
தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் 2015ல் நடராஜன் அறிமுகம் ஆனார். ஆனால் அப்போதே இவரின் பவுலிங் ஆக்சன் சரியிலை என்று தடை செய்யப்பட்டார். பின் பவுலிங் ஆக்சனை மாற்றிவிட்டு வந்தவர், 2016ல் டிஎன்பிஎல் போட்டியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். அதன்பின் பஞ்சாப் அணியால் ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டவர் காயம் காரணமாக அவதிப்பட்டார். பின் கடந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடினார்.

ஐபிஎல் தொடரில்
இந்த ஐபிஎல் தொடரில் தோனி, கோலி, ரசல், ஏபிடி என்று முக்கிய தலைகளின் விக்கெட்டுகளை நடராஜன் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது குறித்து ஐபிஎல் தொடரின் போதே நடராஜன் பேட்டி அளித்து இருந்தார். அதில், நான் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவன். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். என் அப்பா நெசவு தொழில் செய்து வருகிறார். அம்மா சாலை ஓரத்தில் சிக்கன் கடை வைத்து இருக்கிறார். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்துதான் நான் வந்து இருக்கிறேன்.

பயணம்
அரசு பள்ளியில் படிக்கும் போது பென்சில், நோட் வாங்க கூட காசு இல்லை. சின்ன வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். முதலில் டென்னிஸ் பாலில்தான் ஆடினேன். அதன்பின் அண்ணன் உதவியுடன் சென்னையில் 4வது டிவிஷன் போட்டிகளில் ஆடினேன். எங்காவது செல்ல வேண்டும் என்றாலும் கூட என்னிடம் காசு இருக்காது. ஷூ வாங்க காசு இல்லை. சட்டை எடுக்க காசு இல்லை. அணியில் ஸ்பான்சர் மூலம்தான் ஷூ, ஜெர்சி எல்லாம் எனக்கு கிடைத்தது. எனக்கு ரஞ்சி ஆட வேண்டும் என்று ஆசை. அண்டர் 19, அண்டர் 16 போன்ற போட்டிகளில் ஆடிதான் எல்லோரும் ரஞ்சி ஆடுவார்கள். ஆனால் நான் நேரடியாக ரஞ்சி ஆடினேன். எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. 2014ல் நான் ரஞ்சிக்கு தேர்வானேன்.

ஐபிஎல் எப்படி
ஆனால் என்னுடைய முதல் போட்டியிலேயே என் பவுலிங் தவறாக இருக்கிறது என்று தடை செய்துவிட்டனர். என் பவுலிங் ஆக்சன் சரியில்லை என்று கூறி தடை செய்துவிட்டனர். அதன்பின் ஒரு வருடம் கஷ்டப்பட்டேன். ஒரு வருடமாக கஷ்டப்பட்டு என் பவுலிங் ஆக்சனை மாற்றினேன்.ஒரு வருடம் கழித்து கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்தேன். அந்த ஒரு வருடம் என்னை பலர் என்கரேஜ் செய்தனர்.

குழந்தை
அதன்பின் எனக்கு டிஎன்பிஎல்தான் அடையாளம் கொடுத்தது. நடராஜன் என்றால் டிஎன்பிஎல் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அதன்பின்தான் எனக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது, என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த மகிழ்ச்சியோடு இவர் இந்திய கிரிக்கெட் அணியிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications