மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்த ட்ராவிஸ் ஹெட் நான்காவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார். பும்ரா வீசிய துல்லியமான பந்தை கணிக்க முடியாமல் பவுல்டு ஆனார்.
தான் அவுட் ஆனதை நம்ப முடியாமல் அரண்டு போய் நின்றார் ஹெட். இதை அடுத்து இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதே சமயம் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் அரை சதம் அடித்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அறிமுகமான துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடி 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின் மார்னஸ் லாபுஷேன் 72 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஐந்தாம் வரிசையில் ட்ராவிஸ் ஹெட் களம் இறங்கினார். அவர் இதற்கு முந்தைய இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து இருந்ததால் அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவர் ஏழு பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய ஸ்விங் பந்தை தவறாக கணித்து பவுல்ட் அவுட் ஆனார். 7 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார் ட்ராவிஸ் ஹெட். அவர் பந்து ஸ்விங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை. பும்ரா வீசிய அந்த பந்து ஆஃப் சைடு செல்லும் என நினைத்து பேட்டை மேலே உயர்த்தினார் ட்ராவிஸ் ஹெட்.
பந்தை ஆடாமல் விட்டுவிடலாம் என நினைத்தார். ஆனால், பந்து ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்த விக்கெட்டை தொடர்ந்து மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய அணி 246 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. கடைசி மூன்று விக்கெட்களை 9 ரன்களுக்கு இழந்து இருந்தது.
எனினும், அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து வேகமாக ரன் சேர்த்து விக்கெட் வீழ்ச்சியில் இருந்து ஆஸ்திரேலிய அணியை மீட்டனர். ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனது மட்டுமே இந்தியாவிற்கு ஒரே நல்ல விஷயமாக அமைந்தது.