ஆண்டிகுவா : நமீபியா அணிக்கு எதிரான போட்டியின் வென்றதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணி கால் பதித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் நமீபியா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய நமீபியா அணி 17 ஓவர்களுக்கு வெறும் 72 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக கேப்டன் எராஸ்மஸ் மட்டும் 43 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார்.

இவரைத் தவிர்த்து பேட்டிங் செய்த 10 வீரர்களில் 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஆடம் ஜாம்பவா 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் ஆஸ்திரேலியா அணி தரப்பில் டேவிட் வார்னர் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கில் டேவிட் வார்னர் சிக்ஸ், பவுண்டரிகளை விளாசினார். ஆனால் 2வது ஓவரில் டேவிட் வீசே பவுலிங்கில் கேட்ச் கொடுத்து 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் ட்ராவிஸ் ஹெட் - மிட்சல் மார்ஷ் கூட்டணி இணைந்து பொளந்து கட்டியது. பென் ஷிக்கோங்கோ வீசிய 3வது ஓவரில் மட்டும் 4,6,4,1,4 என்று 19 ரன்கள் விளாசப்பட்டது.
பின்னர் 5வது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரி விளாச, மறுபக்கம் மிட்சல் மார்ஷ் 4,6,4 விளாசி ஆட்டத்தை முடித்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 73 ரன்கள் என்ற இலக்கை 5.4 ஓவர்களில் எட்டி வெற்றிபெற்றது. இதன் காரணமாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக பவுலிங் செய்த ஆடம் ஜாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குள் ஆஸ்திரேலியா அணி நுழைந்துள்ளது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஓமன், இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணி மீண்டும் ஐசிசி தொடரில் தனது வேலையை தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.